மதுரை சித்திரை திருவிழா 2023: இன்று மதுரை மண்ணில் ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல்களை பறைசாற்றும் நாள்!

Madurai Chithirai Thiruvizha 2023: சிவன் என்றாலே திருவிளையாடல்கள் இல்லாமல் இருக்காது. அவர் பக்தர்களுக்கு சோதனைகளை வழங்கி பிறகு வரங்களை கொடுப்பவர். அந்த வகையில் இந்த மதுரை மண்ணில் ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம்.

அப்படி ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல்களும் ஒன்று தான் வேடர் பறி லீலை என்பது. இன்றைக்கு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவில் அம்மனும் அம்மையும் தங்கக் குதிரையில் பவனி வர உள்ளனர்.

Madurai Chithirai Thiruvizha 2023: Fifth Day Celebration

அத்துடன் இரவு 7.30 மணிக்கு வேடர் பறி லீலை திருவிளையாடல் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் நடைபெற உள்ளது. மதுரை மண்ணில் ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல்களான வேடர் பறி லீலை, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் திருவிழாவின் போது நிகழ்த்திக் காட்டப்படும்.

ஈசனின் வேடர் பறி லீலை

மதுரை சித்திரை திருவிழாவின் ஐந்தாவது நாளான இன்று ஈசன் வேடர் பறி லீலை திருவிளையாடலை ஏற்றுவார். 63 நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயன்மாரின் வாழ்க்கையில் நடந்த லீலையே வேடர் பறி லீலையாக நடைபெறுகிறது. அதற்குப் அப்புறம் மாலை 7 மணியளவில் அம்மனும் சுவாமியும் தங்கக் குதிரையில் மாசி வீதியை சுற்றி வருவார்கள்.

தங்கக் குதிரை பற்றிய திருநாவுக்கரசர் தேவாரம் பாடல்

"நரியைப் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதம் கொண்டாட வல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசதிர்ந்து ஆனைமுன் ஓடமுன் பணிந்து அன்பர்களேத்த
அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே"

ஐந்தாவது நாள் திருவிழாவின் தத்துவமும் பலனும்

ஐந்தாம் நாள் திருவிழா புலன்களின் வழியே செல்லும் ஐம்பொறிகளும், பஞ்ச அவத்தைகளும், பஞ்ச மலங்களும் தம்வலிகுன்றலைக் குறிப்பதாகும். ஐந்தாம் நாள் இரவு அசுவ (குதிரை) வாகன ஆரோகணம். இது ஸம்ஹாரக் கோலமாகும். அதாவது தர்ம, அர்த்த, காம, மோட்சங்களாகிய (அறம், பொருள், இன்பம், வீடு) எனும் நான்கு கால்களையும் (குதிரையின் நான்கு கால்கள்), கிரியை, ஞானம் எனும் இரண்டு கால்களையும் (குதிரையின் இரண்டு காதுகள்), பரஞானம், அபரஞானம் என்ற இரண்டு கண்களையும் (குதிரையின் இரண்டு கண்கள்), விதியாகிய முகத்தையும் (குதிரையின் முகம்), நிடேதமாகிய வாலையும் (குதிரையின் வால்), ஆகமங்கள் என்கிற ஆபரணங்களையும், மந்திரங்கள் எனும் பாதஸரத்தையும் (குதிரையின் பாதம்), கடிவாளம் எனும் பிரணவத்தையும் (குதிரையின் கடிவாளம்), அண்ட கோடிகளாகிய முதுகையும் (குதிரையின் முதுகு), உடநிடதங்களாகிய சேணத்தையும் கொண்ட வேதக் குதிரையில் இறைவன் சவாரி செய்கிறான் என்பதை உணர்த்துகிறது.

வேடர் பறி லீலை அவதாரம்

63 நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை நோக்கி பாடுவதில் வல்லவர். ஒரு நாள் சுந்தரர் தன்னுடைய காதலுக்காக சிவபெருமானை தூதாகச் செல்லச் சொன்னார். பெருமானுக்கும் சுந்தரருக்கும் இடையே அப்படியொரு அன்யோன்யமான நட்பு இருந்தது. சுந்தரர் தனக்கு என்ன தேவையோ அதை தன்னுடைய நண்பரான சிவபெருமானிடமே நேரடியாக கேட்டுப் பெறுபவர்.

இந்த வழக்கத்துக்கு மாறாக, சுந்தரருக்கு மன்னர் ஒருவர் பொன்னும், அளவிடமுடியாத பரிசுகளும் அளித்து அவரை வழியனுப்புகிறார். இதை அறிந்த சிவபெருமான் அப்போது தன்னுடைய திருவிளையாடலை ஆரம்பிக்க முயற்சி செய்கிறார். தன்னுடைய நண்பர் சுந்தரர் தம்மை இதுவரை திட்டிப் பாடவில்லையே என நினைத்த பெருமானார் அதற்காக ஒரு திருவிளையாடல் புரிகிறார்.

தம்முடைய பூத கணங்களுடன், வேடனாகச் சென்று சுந்தரர் அறியாவண்ணம் அவரிடம் உள்ள பொருட்களை கவர்ந்து கொள்கிறார். மறுநாள் காலையில் எழுந்த சுந்தரர் எந்துற்கு எம்பிரான் நீரே...' எனத் தொடங்கி பத்து பதிகங்களால் தன் கோபத்தை காட்டும் நோக்கில் திட்டி பாடுகிறார். பிறகு சிவபெருமான் அவர் முன் தோன்றி இதுவும் என் திருவிளையாடலே என்று கூறி அவர் களவாடிய பொருட்களை எல்லாம் இரண்டு மடங்காக ஆக்கி அதிக செல்வத்தை சுந்தரருக்கு பரிசளிக்கிறார் என்கிறது புராண வரலாறு.

ஐந்தாவது நாள் தங்கக் குதிரை புறப்படும் நேரம்

காலை எழுந்தருளும் நேரம் : 9.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : மாசி வீதிகள்
வாகன விபரம் : தங்கச்சப்பரம்
இரவு எழுந்தருளும் நேரம் : 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : வடக்கு மாசி வீதி, கீழ மாசி வீதி அம்மன் சன்னதி வழியாக கோயிலுக்கு வருதல்.

வாகன விபரம் : தங்கக் குதிரை

இரவு 9.30 மணியளவில் திருவிழா முடிவுற்று கோயிலுக்கு வரும் நேரமாகும். அப்புறம் இரவு 9.30 மணிக்கு கோயிலுக்குள் எழுந்தருளி மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் வேடர் பறி லீலை திருவிளையாடல் நடைபெறுகிறது.

தங்கக் குதிரை அலங்காரம்

தங்கக் குதிரையில் மதுரை மீனாட்சி அம்மனும், அப்பர் சுந்தரேஸ்வரரும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இரண்டு பக்கமும் மேள தாளங்கள் சூழ மதுரை மாசி வீதிகளில் வலம் வருவார்கள். குழந்தைகளும் மற்றும் பக்தர்களும் பல்வேறு வேடம் அணிந்தும், நாட்புறப் பாடல்கள் பாடியும், சின்னஞ் சிறு குழந்தைகள் கோலாட்டாம் ஆடியும் அம்மனையும் அப்பனையும் வரவேற்பார்கள்.

மக்கள் தாங்கள் கொண்டு மலர்கள் மற்றும் பூ மாலைகளை அம்மனுக்கு கொடுத்து அர்ச்சனை செய்து தீபாராதனை தொட்டு கும்பிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுவார்கள். இன்றைக்கு ஈசனின் திருவிளையாடல்களை காணக் கண்கோடி வேண்டும்.

Desktop Bottom Promotion