காந்திக்கு முன் இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர் யார் தெரியுமா? அதுவும் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராம்..

Independence Day 2024: இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஏராளமானோர் போராடியுள்ளனர். இருப்பினும், இந்திய சுதந்திரத்திற்கு போராடியவர் யார் என்று கேட்டவுடனே, அனைவரும் முதலில் கூறுவது மகாத்மா காந்தியைத் தான். ஆனால் இந்திய சுதந்திரத்திற்காக மகாத்மா காந்திக்கு முன்னரே பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதுவும் மகாத்மா காந்திக்கு முன் ஆங்கிலேயருக்கு எதிராக மங்கல் பாண்டே 1827-1857 காலகட்டத்தில் போராடியுள்ளார். இருப்பினும் இவருக்கும் முன்னர் 1759 ஆம் ஆண்டில் ஒருவர் இந்திய சுதந்திரத்திற்காக போராடியுள்ளார்.

Independence Day 2024 Who Was The First Freedom Fighter To Raise His Voice Against The British

அதுவும் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் யார் தெரியுமா? அவர் தான் மாவீரன் அழகுமுத்துக் கோன். இப்போது யார் இந்த அழகுமுத்துக் கோன், இவர் ஆங்கிலேயருக்கு எதிராக எப்போது போராடினார் என்பன குறித்து விரிவாக காண்போம்.

மாவீரன் அழகுமுத்துக் கோன் பிறப்பு

மாவீரன் அழகுமுத்துக் கோன் என்பவர் 1728 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தின் மன்னராக இருந்த அங்கமுத்து கோனுக்கும், ராணி அழகுமுத்தம்மாளுக்கும் மகனாக பிறந்தார். 1729 ஆம் ஆண்டு இவரது தம்பி சின்ன அழகுமுத்துக் கோன் பிறந்தார். 1750-இல் மன்னர் அங்கமுத்துக் கோன் அனுமந்தகுடி போரில் மரணம் அடைந்தார்.

அதே ஆண்டு அழகுமுத்துக் கோன் தனது 22 வயதில் கட்டாலங்குளத்தின் மன்னராக பொறுப்பேற்றார். தந்தையின் மரணத்தால் ஒரு கடினமான கட்டத்தில் இருந்த அழகுமுத்துக் கோனுக்கு ஆறுதலாக இருந்தவர் தான் எட்டயபுரம் மன்னர் ஜெகவீர ராமபாண்டிய எட்டப்பன். இவர் அழகுமுத்துக் கோனின் நெருங்கிய நண்பராவார்.

ஆங்கிலேயருக்கு எதிரான முதல் போராட்டம்

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் 1857 இல் நடத்தப்பட்டது என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கு முன்னதாகவே, அதுவும் 1759 ஆம் ஆண்டே போராட்டம் தொடங்கிவிட்டன. சொல்லப்போனால் ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலாக போரை நடத்தியவர் அழகுமுத்துக் கோன் ஆவார்.

பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் பிள்ளை (கான் சாஹிப்) எட்டயபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள முகாம்களுக்கு வரி வசூலிக்க வந்தபோது, ​​அவர்கள் வருகையைப் பற்றி கேள்விப்பட்ட எட்டப்பன் உடனடியாக தனது அமைச்சர்கள், நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் அழகுமுத்து கோன் ஆகியோருடன் மிக நெருக்கமான சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பில் ஆங்கிலேயருக்கு வரி செலுத்த போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

எட்டயபுரம் மன்னரிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத ஆங்கிலேயர்கள் கோபம் கொண்டு, அலெக்சாண்டர் கிரேனையும், கான் சாஹிப்பையும் அவர்களுக்கு எதிராக போர் தொடுக்குமாறு அனுப்பினர். அழகுமுத்துக் கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் பெத்தநாயக்கனூர் கோடடையில் போர் நடந்தது. அந்த போரில் அழகுமுத்துக் கோனின் வலது காலில் துப்பாக்கியால் சுடப்பட்டது. இருந்தாலும், இந்த போர் 3 மணிநேரம் நீடித்திருந்தது.

இறுதியில் அழகுமுத்துக் கோனும், அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பீரங்கி முன் நிறுத்தி வரி செலுத்துமாறு வற்புறுத்தினர். மேலும் மன்னிப்பு கேட்டால் உயிர் தப்பும் என்று சொன்னார்கள். ஆனால் அழகுமுத்துக் கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனால் 248 போர் வீரர்களின் வலது கைகள் துண்டிக்கப்பட்டன மற்றும் அழகு முத்துக்கோன் மற்றும் அவரது 6 படைத்தளபதிகளும் மார்பில் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்தியாவில் முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிராக போரை நடத்தியவர் மாவீரன் அழகுமுத்துக் கோன். இன்று வரை தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி, இவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசின் சார்பில் மதுரையில் அழகுமுத்துக்கோன் தபால் தலையும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 5, 2024, 15:16 [IST]
Desktop Bottom Promotion