சென்னையில இருக்கீங்களா? மிக்ஜாம் புயலில் இருந்தும் கனமழையிலும் பாதுகாப்பாக இருக்க இத பண்ண மறந்துடாதீங்க!

நேற்று( டிசம்பர் 3) வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று இன்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் எங்கும் வெள்ளக்கடாய் காட்சியளிக்கின்றன. மிக்ஜாம் புயல் இன்று(டிசம்பர் 4) கரையை கடக்கும் நிலையில் மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Cyclone Michaung: Safety Tips To Stay Safe During the Storm In Tamil

இந்த கடுமையான மழை மற்றும் புயலின் இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதுகாப்பாய் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

வதந்திகளை நம்பக்கூடாது

புயல், மழை என எந்த இயற்கை சீற்றம் வந்தாலும், இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்பக்கூடாது. அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

பாதுகாப்பான பகுதிக்கு செல்லுங்கள்

நீங்கள் வசிக்கும் பகுதிக்கு எச்சரிக்கை அலார்ட் விடப்பட்டிருந்தால், பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தங்குங்கள். இல்லையென்றால், அரசு அமைத்திருக்கும் பாதுகாப்பு மையத்திற்கு சென்று தங்குங்கள். புயலின்போது, நீங்கள் இருக்கக்கூடிய இடம் அதன் சாத்தியமான பாதிப்பின் பாதையிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும். பாதுகாப்பான இடத்தில் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும். புயல் கரையை கடக்கும்போது அல்லது வேகமாக காற்று வீசும்போது, ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு அருகே நிற்காதீர்கள். இது தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

சூறாவளி மற்றும் புயல் காத்து மிகவும் சக்திவாய்ந்த இயற்கை சீற்றங்கள், கண்ணிமைக்கும் ஒரு கணத்தில் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். புயல் கரையை கடக்கும்போது இருக்க வேண்டிய இரண்டாவது சிறந்த இடம், உங்கள் வீட்டின் முதல் மாடியில் உள்ள உட்புற அறை ஆகும். புயல் நேரங்களில் பலத்த காற்று வீசும் என்பதால் மேற்கூரைகள் பறந்து விழும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம்.

அத்தியாவசிய தேவைகள்

இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் சாலைகளில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதனால், முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை மழைநீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால், சானிட்டரி பேட் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். கயிறு, மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு, அவசர விளக்கு, தீப்பெட்டி, மின்கலங்கள், மருத்துவ கட்டு, உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள், குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம்

ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் செல்ஃபி மற்றும் வீடியோ எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். அதேபோல, மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்பதால், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதன் மூலம் இயற்கை சீற்றங்களில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம்.

அவசர கால உதவி எண்கள்

புயல் கரையை கடந்துவிட்தாக அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அவசர உதவிக்கு மாநில அவசரகால செயல்பாட்டு மையம் - 1070,
வாட்ஸ் அப் எண் - 94458 69848,
மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் - 1077 ஆகியவற்றை தொடர்பு கொள்ளுங்கள்.

Story first published: Monday, December 4, 2023, 13:53 [IST]
Desktop Bottom Promotion