Budget 2025: இந்த ஆண்டு பட்ஜெட்டிற்கு துலாரி தேவி அளித்த புடவையில் வந்த சீதாராமன்.. யார் இந்த துலாரி தேவி?

Budget 2025: ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும நாளன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தோற்றம் அதிகமாக பேசப்பட்டு வரும். ஏனெனில் அவர் தேர்ந்தெடுத்து அணிந்து வரும் புடவைகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியின் பாரம்பரியம், நேர்த்தி மற்றும் அடையாளத்தின் தனித்துவமான கலவையைப் பிரதிபலிக்கும்.

இதுவரை இவர் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அணிந்து வந்த புடவைகள் அனைத்தும் பெரும்பாலும் ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்ட புடவைகளாக இருந்தன. மேலும் இவர் இந்திய கைவினைத்திறன் மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதை உணர்த்தும் வகையில் இப்படியான புடவைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து அணிந்து வருகிறார்.

Budget 2025 FM Nirmala Sitharaman Wears Madhubani Art Saree

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 01 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, நிர்மலா சீதாராமன் மிகவும் அழகான மற்றும் பாரம்பரிய கைவினைத்திறனை வெளிப்படுத்தும் மதுபானி கலையின் புடவையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்துள்ளார்.

மிதிலா ஆர்ட் இன்ஸ்டிட்யூட்டில் கிரெடிட் அவுட்ரீச் செயல்பாட்டிற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுபானிக்குச் சென்றபோது, ​​அவர் பிரபல மதுபானி கலைஞர் துலாரி தேவியைச் சந்தித்து பீகாரில் உள்ள மதுபானி கலையைப் பற்றிய எண்ணங்களை அன்புடன் பரிமாறிக் கொண்டார். அப்போது இந்த புடவையை 2021 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவி வழங்கினார். அப்போது பட்ஜெட் தினத்தன்று இந்த புடவையை அணியுமாறு கேட்டுக் கொண்டதால், தற்போது நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது 8வது முறையாக இந்த புடவையை அணிந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

யார் இந்த துலாரி தேவி?

மதுபானி மாவட்டத்தின் ராஜ்நகர் தொகுதியின் ராந்தி கிராமத்தில் வசிக்கும் துலாரி தேவி தனது வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்தார். 12 வயதில் திருமணம் செய்து கொண்ட அவரை, அவரது கணவர் 16 வயதில் விட்டு வெளியேறினார். இருப்பினும் அவர் சற்றும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை இழக்கவில்லை.

தனது தாய்வீட்டிற்குத் திரும்பிய பின், பத்மஸ்ரீ மகாசுந்தரி தேவி மற்றும் கற்பூரி தேவியிடம் மிதிலா ஓவியத்தைக் கற்றுக்கொண்டார். அப்போது பேனா, பேப்பர் இல்லாததால் தரையில் மரத்தில் வரைந்து பழகி வந்தார். படிப்படியாக அவரது கலை மேம்பட்டு இன்று அவர் பிரபல கலைஞராக உள்ளார். அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் மிதிலா கலை உலகில் அவருக்கு தனி இடத்தை உருவாக்கி உள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion