திருந்திய சீடன்!!!

By Maha

Disciple
ஜென் குரு ஒருவரிடம் நான்கு மாணவர்கள் சீடர்களாக சேர்ந்தனர். அந்த குரு எப்போதும் எந்த செயலையும் சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அதேப்போல் தான் தன் சீடர்களும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரது சீடர்கள் மிகவும் குறும்புதனம் உடையவர்கள், எதை சொன்னாலும் அலட்சியமாக இருப்பவர்கள். அதனால் குரு அவர்களிடம், தான் என்ன சொன்னாலும் அதை மறுக்காமல் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டார். மேலும் அவர் எந்த ஒரு செயலை செய்யும் போது நிறுத்து என்று சொன்னாலும், உடனே சீடர்கள் அந்த செயலை நிறுத்திவிட வேண்டும். இல்லையெனில் கடும் தண்டனை கொடுப்பேன் என்று சொன்னார்.

அதனால் சீடர்கள் அவர் சொன்னபடியே நடந்து வந்தனர். ஆனால் அவர்கள் அந்த தண்டனைக்கு பயந்து தான் பின்பற்றினார்களே தவிர, தான் எதற்கு வந்துள்ளோம், வாழ்க்கை என்பது என்ன என்று எதையும் மனதில் கொண்டு பின்பற்றவில்லை.

ஒரு நாள் அந்த நான்கு சீடர்களும் கால்வாயில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது குரு அவர்களிடம் நிறுத்து என்று சொன்னார். அவர்கள் நால்வரும் உடனே நின்றுவிட்டனர். அப்போது அந்த கால்வாயில் நீரை யாரோ திறந்து விட, நீரோ பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் கழுத்து வரை வரும் போது ஒருவன் பயந்து கரை ஏறிவிட்டான். மூக்கு வரை வரும் போது மற்ற இருவரும் குருவுக்கு தெரிய போகிறதா? என்று சொல்லி, இருவரும் மேலே ஏறினர். ஆனால் ஒருவன் மட்டும் அப்படியே நின்றான். அவனது தலை மூழ்கும் நிலைக்கு வந்துவிட்டது. அப்போது குரு வேகமாக பாய்ந்து வந்து, அவனை காப்பாற்றினார்.

மரணத்தின் வாசலை தொட போய், உயிர் பிழைத்து வந்த அந்த சீடன் கால்வாயிலிருந்து வெளியே வந்து கண்களை திறக்கும் போது புதிய மனிதனாக பிறப்பெடுத்தான். அதனால் தன் குருவை அவன் முழுமையாக ஏற்றுக் கொண்டான். அன்றிருந்து அவன் ஒரு நல்ல சீடனாக தன் குருவிற்கு நடந்து வந்தான்.

ஆகவே எப்போதும் விளையாட்டுத்தனமாக இருந்தால், உண்மையான வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே எந்த நேரத்தில் எப்படி நடக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் அப்படி நடக்க வேண்டும்.

Story first published: Friday, September 28, 2012, 15:36 [IST]
Desktop Bottom Promotion