குளிர்காலத்தில் மரச்சாமான்களில் பூஞ்சை பிடிக்காமல் இருக்க சில டிப்ஸ்...

By Maha

குளிர்காலங்களில் ஏற்படும் ஒரு பெரிய தொல்லை தான், மரச்சாமான்களில் பூஞ்சை படிவது. ஆம், இந்த காலங்களில் வீட்டில் அதிகப்படியான ஈரப்பசை இருப்பதால், மரச்சாமான்களில் ஈரமானது தங்கி, பூஞ்சைகளை படிய வைக்கின்றன. இப்படி மரச்சாமான்களில் பூஞ்சை இருந்தால், அது ஆங்காங்கு வெள்ளை வெள்ளையாக காணப்படுவதோடு, மரச்சாமானின் அழகு மற்றும் தரத்தை கெடுத்துவிடுகின்றன. எனவே வீட்டில் மேஜை மற்றும் நாற்காலிகளில் மரத்தால் செய்யப்பட்டதாக இருந்தால், சரியாக பராமரிப்பது அவசியமாகும்.

அதுமட்டுமின்றி, நிபுணர்கள் வீட்டில் மரச்சாமான்கள் ஈரமாக இருந்தால், அவற்றை வெயிலில் நீண்ட நேரம் உலர வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் மரச்சாமான்களுக்கு போதிய வெயில் கிடைக்காவிட்டால், மீண்டும் பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.

Get Rid Of Mold On Damp Furniture

ஆகவே மரச்சாமான்களில் பூஞ்சை படியாமல் இருக்கவும், படிந்த பூஞ்சையைப் போக்கவும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கீழே சில வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி செய்து வந்தால், மரச்சாமான்களை சுத்தமாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ளலாம்.

* மரச்சாமான்களான மேஜை மற்றும் நாற்காலி ஈரமாக இருந்தால், வெளியில் எவ்வளவு நேரம் வைக்க முடியுமோ, அவ்வளவு நேரம் வைக்க வேண்டும். இதனால் மரச்சாமான்களில் பூஞ்சை இருந்தால் காய்ந்துவிடும். பின் அதனை எளிதில் நீக்கிவிடலாம்.

* ஈரமான மரச்சாமான்களில் உள்ள பூஞ்சையை துடைப்பம் கொண்டு நன்கு தேய்த்து, பின் வெயிலில் காய வைக்க வேண்டும்.

* எவ்வளவு தான் பூஞ்சையை துடைப்பம் கொண்டு தேய்த்து நீக்கினாலும், தேய்த்த இடமானது வெள்ளையாக தெரியும். ஆகவே அப்படி தேய்த்த பின்பு, வெள்ளை வினிகரில் நனைத்த ஈரமான துணியைக் கொண்டு ஒருமுறை துடைத்து எடுக்க வேண்டும்.

* வினிகர் கொண்டு துடைத்து எடுத்தப் பின்னர், அதனை வெளியே வெயிலில் குறைந்தது 2 மணிநேரமாவது உலர வைத்து, பின் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.

* மேற்கூறியவற்றை செய்து முடித்த பின், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்த கலவையை பஞ்சில் நனைத்து, அதனை மரச்சாமான்களின் மேல் ஒரு கோட்டிங் போல் தேய்த்தால், எலுமிச்சையானது மீண்டும் பூஞ்சை வராமல் தடுக்கும்.

* இறுதியில் மீண்டும் மரச்சாமான்களை வெயிலில் 1/2 மணிநேரம் உலர வைத்து எடுத்தால், உங்கள் மேஜை மற்றும் நாற்காலி புதிது போன்று பளிச்சென்று மின்னும்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், நிச்சயம் குளிர்காலங்களில் வீட்டில் இருக்கும் மரச்சாமான்களான மேஜை மற்றும் நாற்காலியை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

Story first published: Thursday, November 28, 2013, 16:03 [IST]
Desktop Bottom Promotion