உங்க வீட்ல மைக்ரோவேவ் ஓவன் இருக்கா? இதப்படிங்க!

By Mayura Akilan

Microwave Oven
சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதில் இருந்து மின்சாதன அடுப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இன்டக்ஸன் ஸ்டவ், மைக்ரோவேவ் ஓவன் என நடுத்தர குடும்பத்து மக்கள் கூட எலக்ட்ரானிக் அயிட்டங்களுக்கு மாறிவிட்டனர். மைக்ரோவேவ் ஓவனை எவ்விதம் பயன்படுத்துவது என்று ஆலோசனை கூறுகிறார் பிரபல சமையல்கலை நிபுணர்.

காபி, டீ சூடு பண்ணுவதிலிருந்து, சாதம் வடிப்பது, கேசரி, பாயசம் செய்வது வரை அனைத்து வகை சமையலையும் சில நிமிடங்களில் மைக்ரோவேவ் அவனில் தாராளமாகச் செய்யலாம். சாதாராண அடுப்பில் செய்வதைவிட ஓவனில் செய்வது ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும்.

ஓவனில் உணவை சமைக்க வைக்கும் போது நன்கு மூடி வைக்கவேண்டும். மைக்ரோவேவ் ஒவனினுள் எந்த அளவிற்கு உணவுப்பொருட்களை வைக்க வேண்டுமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுகளை வைக்கவேண்டும். இல்லையெனில் அழுத்தம் அதிகமாகி உணவு சூடாவதில் பிரச்சினை ஏற்படும்.

ஓவனில் வைப்பதற்கு என உள்ள பொருட்களை மட்டுமே வைக்க வேண்டும். மெட்டல், அலுமினியம் போன்றவைகளால் ஆன பாத்திரங்களை எந்த காரணத்திற்காகவும் அவனில் பயன்படுத்தக்கூடாது. எனவே ஓவனில் சமைப்பதற்கென்றே விற்கப்படுகிற கண்ணாடிப் பாத்திரங்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

சாதம் வடிக்க மொத்தமே 7 நிமிடங்கள்தான் ஆகும். அந்த 7 நிமிடங்களில் இடையில் 2 முறையாவது பாத்திரத்தை வெளியே எடுத்து கிளறிவிட்டு மறுபடி உள்ளே வைக்க வேண்டும். கிளறி விட்டுச் சமைக்கிற இந்த டெக்னிக் மைக்ரோவேவில் சமைக்கிற எல்லாவற்றுக்கும் பொருந்தும். வழக்கத்தைவிட இதில் மிகக் குறைந்த எண்ணெயே செலவாகும். வெண்டைக்காய், பீன்ஸ், கீரை என காய்கறிகள் கலர் மாறாமல் வெந்திருக்கும்.

மைக்ரோவேவில் சமையல் முடிந்துவிட்டதற்கான ஒலி வந்ததும், பாத்திரத்தை வெளியே எடுத்து விட வேண்டும். உள்ளேயே இருந்தால் சூடாக இருக்கும் என வைத்திருந்தால், நேரம் முடிந்த பிறகும், மைக்ரோவேவ் சமையலைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

உணவு வைக்கும் பாத்திரத்தையும், ஓவனையும் நன்றாக சுத்தமாக வைக்கவேண்டும். அப்பொழுதுதான் ஓவன் நீடித்து உழைக்கும்.

உணவை சமைத்து முடித்த உடன் வெளியே எடுத்து விட்டு ஆஃப் செய்து விட வேண்டும். பிளக்கை ஸ்விச் போர்டில் இருந்து எடுத்து விடலாம். காபி, டீ போன்ற நீர்மப் பொருட்களை சூடு படுத்த 2 நிமிடம் போதும். எந்த காரணம் கொண்டும் ஓவனில் சுடு தண்ணீர் வைக்க வேண்டாம்.

பாத்திரங்கள் அடிபிடிப்பதோ, சமைக்கிற உணவு பொங்கி வழிவதோ இருக்காது. சமையல் முடிந்ததும், உள்ளே இருக்கும் சுழலும் தட்டை எடுத்து சோப்புத் தண்ணீரில் கழுவித் துடைத்தால் போதும். அவனின் உள்பகுதியை ஈரத்துணியால் துடைத்துக் காய வைத்தாலே சுத்தமாகி விடும்.

Story first published: Thursday, May 24, 2012, 11:29 [IST]
Desktop Bottom Promotion