குளியலறை அழகா இருந்தா புத்துணர்ச்சி கிடைக்கும்!

By Mayura Akilan

Bath Room
அழகான குளியலறையில் அன்றைய தினம் துவங்கினால் நாள் முழுவதும் மனதில் புத்துணர்ச்சி இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. குளியலறைக்காக அதிகம் செலவழித்து அழகுபடுத்த வேண்டும் என்று அவசியமில்லை. இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொண்டாலே அழகுதான்.சுவரில் இயற்கைக் காட்சி ஓவியங்களை வைக்கலாம். குளியலறையின் நீளமான சன்னல்களில் திரைகளைத் தொங்க விடவும். சுவரில் கண்ணாடி ஷெல்ஃப் வைத்து அதில் அழகான பூந்தொட்டிகள் வைக்கலாம்.

காலாவதியான பொருட்கள்

குளியலறையில் காலவதியான ஷாம்பு பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் இருந்தால் அதை தூக்கி குப்பையில் போடுங்கள். தேவையற்ற அல்லது உபயோகப்படுத்தாத பொருட்களை குளியலறையில் இருந்து அகற்றி விடுங்கள். இதனால் குளியலறை சுத்தமாகும். காலாவதியான அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களையும் அங்கிருந்து நீக்கிவிடுங்கள்.

குழந்தைகள் பத்திரம்

குளியலறையில் பயன்படுத்தப்படும் சிறு சிறு பொருட்களை கண்ணாடிக் டப்பாக்கள் அல்லது செரமிக் கிண்ணத்தில் வையுங்கள். கூடுதல் அழகு கிடைக்கும். சிறியவர்கள் உள்ள வீடு எனில் மூடப்பட்ட பிளாஸ்டிக் டப்பாக்களில் சோப்பு, ஷாம்பு இருக்கட்டும். அப்பொழுதுதான் அவை கீழே விழுந்தாலும் உடைந்து வீணாகாது. குளிக்கும் தண்ணீர் பட்டு சோப்பு, ஷாம்பு எதுவும் கரைந்து விடாமல் பத்திரமாக வைக்கவேண்டும்.

பாத்ரூம் சுத்தம் செய்யப்பயன்படுத்தும் ஆசிட், பினைல், சோப்புகளை தனியாக ரேக் அமைத்து அதில் வைக்கவும். இதனால் உடலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும், கிளீனிங் பொருட்களுக்கும் குழப்பம் ஏற்படாது.

குளியலறைக்கு வர்ணம்

குளியலறை சுவர்கள் பழையதாக இருந்தால் வர்ணம் பூசுங்கள். கூடுமானவரை, மிதமான நீலம், மிதமான பச்சை வர்ணம் பூசினால் கூடுதல் அழகும், குளியலறைக்குள் நுழையும்போதே ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

குளியலறையில் துணிகளை தொங்கவிடும் ரேக்கினை வாங்கி அதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பயன்படுத்திப் பொருத்துங்கள். குளியலறை டைல்ஸ் பதித்ததாக இருந்தால் நிறுத்தி வைக்கக்கூடிய ரேக்கினை வாங்கிப் பயன்படுத்துங்கள் சுவரில் பாதிப்பு ஏற்படாது.

Story first published: Friday, March 30, 2012, 15:32 [IST]
Desktop Bottom Promotion