அனஸ்தீசியா என்றால் என்ன? மயக்கவியல் மருத்துவம் குறித்து விளக்குகிறார் டாக்டர். பி. ராமமூர்த்தி

நோய் வந்தால் முதலில் நாம் கைவைத்தியம் செய்து பார்ப்போம். அது குணமடையவில்லையென்றால் அடுத்ததாக மருத்துவரிடம் செல்வோம். நம்மை பரிசோதிக்கும் மருத்துவர் இரண்டு முறையில் சிகிச்சை வரையறைப்பதுண்டு.. அதில் ஒன்று மருத்துவம் மட்டும். மற்றொன்று அறுவை சிகிச்சையுடன் கூடிய மருத்துவம். அப்படி அறுவை சிகிச்சையுடன் கூடிய மருத்துவத்தையே செய்ய வேண்டும் என்று மருத்துவர் முடிவு செய்தவுடன் மயக்கவியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற அறிவுறுத்துவார்.

ஆம் எந்தவொரு அறுவை சிகிச்சையாக இருந்தாலும், முதலில் மயக்கவியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.. அதன் பிறகுதான் மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்குவார்கள்.. ஆக மருத்துவத்துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவர்தான் மயக்கவியல் நிபுணர்.. அதுமட்டுமல்லாமல் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் அனஸ்தீசியாவின் பங்கு மிக முக்கியமானது.. இந்த அனஸ்தீசியா (anaesthesia )என்றால் என்ன? ஏன் அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது? அதை ஏன் அறுவை சிக்கிச்சை செய்யும் மருத்துவரே கொடுக்கக்கூடாதா? மயக்கவியல் நிபுணர்தான் கொடுக்க வேண்டுமா? என போல்ட் ஸ்கை தமிழின் பலவிதமான கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார் திருச்சி சில்வர்லைன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை மயக்கவியல் மருந்து நிபுணர் Dr.பி.ராமமூர்த்தி..

What is anesthesia Dr P Ramamoorthi explained about Anesthesiology and its awareness

மயக்கவியல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் ராமமூர்த்தி, ”மருத்துவத் துறையில் முக்கியப் பங்கு வகிப்பது மயக்கவியல் துறை. அறுவைசிகிச்சை, வலி நீக்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளில் மயக்கவியல் முக்கியப் பங்காற்றுகிறது. அறுவைசிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சையின் போதும், பின்பும் நோயாளிகளின் மொத்த பெரியோபரேடிவ் கவனிப்புடன் தொடர்புடைய மருத்துவ சிறப்பு ஆகும். அறுவைசிகிச்சையின் போது ஏற்படும் வலி உணர்வை போக்க மயக்க மருந்துகள் வழங்கப்படுகின்றன.. இது மயக்க மருந்து , தீவிர சிகிச்சை மருந்து , முக்கியமான அவசர மருத்துவம் மற்றும் வலி மருந்து ஆகியவற்றை உள்ளடக்கியது” என்றார்..

அதனைத் தொடர்ந்து பேசியவர்,” மயக்கியியல் நிபுணர் என்பவர் நோயாளியின் மருத்துவ வரலாற்றையும் உடல் நிலையும் ஆராய்ந்து அதற்கேற்றவாறு மயக்க மருந்து முறையை தேர்வு செய்வார்.. இதில் நோயாளியின் கடமையானது. மருத்துவர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் மறுக்காமல் எதையும் மறைக்காமல் இருப்பதை அப்படியே தெரிவிப்பது நல்லது... நோயாளி குறிப்பிட்ட விஷயங்களை ஆராய்ந்து பிறகு நோயாளிவின் உடலுக்கு ஏற்றவாறு மூன்று பாகங்களில் மருத்துவர் குறிப்பிடுவார்” என்று தெரிவித்தார் டாக்டர் ராமமூர்த்தி..

அதாவது, பாகங்களின் முக்கியத்துவத்தை விகிதாசாரத்தில் பிரித்தால்

1 அறுவை சிகிச்சைக்கு முன் - 33. 33%

2. அறுவை சிகிச்சையின் போது- 33. 33%

3. அறுவை சிகிச்சைக்கு பின் - 33. 33% ஆக இருக்கும்.. இறுதியாக அது 100%ஆக வர வேண்டும்..

அதனைத் தொடர்ந்து மயக்க மருந்து எப்படி கொடுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த மருத்தவர்,” முதலில் அறுவை சிகிச்சைக்கு பின் (post operative period) ஏற்படும் பின்விளைவுகளை அறிந்து கொண்டால்தான் அறுவை சிகிச்சைக்கு முன் நாம் எப்படி தயாராக வேண்டும் என்ற புரிதல் ஏற்படும். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நோயாளியின் உடலில் பல மாற்றங்கல் ஏற்படும். எடுத்துக்காட்டாக, இழந்த இரத்தத்தை மீண்டும் உடலில் உயர்த்துவது. குடல் அறுவை சிகிச்சையின் போது உணவின்றி இரண்டு மூன்று நாட்கள் இருக்க வேண்டிய சூழல், உடல்வலி போன்ற இன்னும் பல காரணங்களால் உடம்பு உடல்சக்தியை அதிகமாக பயன்படுத்தும். அதாவது உடல்சக்தி விரையம் அதிகமாகும்.. உடல் (Catabolic state) நிலையை அடையும். அச்சமயத்தில் உடலுக்கு தேவைப்படும் அதிக சக்தியை அறுவை சிகிச்சைக்கு முன்பே உடலில் சேர்த்து தயாராவதுதான் இந்த prehabilitation முறை என்பார்கள்” என்று கூறினார்..

அறுவை சிகிச்சைக்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் ராமமூர்த்தி,” prehabilitation பற்றி விவரமாக தெரிந்துக் கொள்ள, முதலில் அறுவை சிகிச்சைக்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம். அறுவை சிகிச்சைக்கு முன் (preoperative period) உடலை தயார் செய்ய சில விஷயங்களை செய்ய வேண்டும்..

1) உணவு ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று சத்தான உணவுகளை சரியான விகிதத்தில் உண்ண வேண்டும்..

2) மனதை திடப்படுத்தி தயார் செய்தல்

3) உடற்பயிற்சி முக்கியமாக முச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தல்

4) கூட்டுநோய் சிகிச்சை (இரத்த சோகை, சர்க்கரை நோய் etc)செய்தல்

5) புகைப்பிடித்தல் மது அருந்துவது தவிர்த்தல்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே இவற்றை ஆரம்பிக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்கு முன் இருந்தாவது செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் பின் விளைவுகள் அறுவை சிகிச்சை வலி, தீவிர சிகிச்சை நாட்கள், நுரையீரல் தொந்தரவு ஆகியவை குறைந்து விரைவிலேயே முழு உடல்நலம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. இது ஆராய்ச்சியிலும் எங்கள் அனுபவத்திலும் உறுதிபடுத்தபட்டுள்ளது” என்று தெரிவித்தார்.. மேலும், ”அறுவைச் சிகிச்சையின் போது ஆப்ரெஷன் தியேட்டருக்குள் உள்ளே செல்லும்பொழுது அனைத்தும் நன்றாகவே செயல்படும் என்று முழு நம்பிக்கையுடனும் மன அமைதியுடனும் நோயாளி செல்ல வேண்டும்” என்றார்..

மயக்கவியல் முறைகள் குறித்து கேள்விளை கேட்டதற்கு பதிலளித்த மருத்துவர், 1) முழு மயக்கம் - காற்றுக்குழல் (Trachea) குழாயுடன் ( General anesthesia), காற்றுக்குழல் குழாயின்றி (Intravenous sedation)

2) பகுதி மயக்கம் (Regional anaesthesia) முழு மயக்கம் காற்றுகுழல் குழாயுடன் இம்முறையை சமச்சீர் (Balanced anaesthesia) மயக்கநிலை முறை என்பார்கள். இச்செயல் முறையை மூன்று பாகங்களில் செயல்படுத்துவார்கள்.

1) மயக்கநிலை (hypnosis)

2) அறுவை சிகிச்சை செய்யும்போது மயக்கமாக இருந்தாலும் வலி வர வாய்ப்பு (Analgesia) உள்ளது. ஆகையால், வலி நிவாரண மருந்து கொடுக்க வேண்டும்.

3) தசை தளர்வு நிலை (Muscle relaxation) என்று விளக்கினார்..

மேலும் இதை செயல்படுத்தும் முறை குறித்து பேசியவர், “ அறுவை சிகிச்சை அரங்கத்திற்குள் வந்தவுடன், நாடித்துடிப்பு, நோயளியின் இரத்த அழுத்தம் அளவு ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை குறியீடு எடுத்தபின் மயக்க மருந்து செலுத்தப்படும். மூச்சு நின்ற பிறகு (குறிப்பு: இருதயம் செயலில் இருக்கும் ) காற்று குழலின் குழாயை செலுத்தி மூச்சு செயற்கையாக தொடரப்படும்” என்றார்..

மேலும், காற்றுக்குழல் குழாய் இல்லாத மயக்க நிலை எப்படி செயல்படும் என்ற கேள்விக்கு பதிலளித்தவர், “ இம்முறை சிறிய மற்றும் குறைந்த நேர அறுவை சிகிச்சைக்கே பயன்படுத்தப்படும். இதில் மயக்க மருந்து மற்றும் வலி நிவாரணி மருந்து மட்டும் கொடுத்து மயக்கநிலை உருவாக்கப்படும்.(தசை தளர்வு மருந்து கொடுக்கப்படாது) இம்முறையில் புரையேற வாய்ப்பு உள்ளது. என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனினும் புரையேறுதல் மிகமிக அறிது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்..

அதனைத் தொடர்ந்து பகுதி மயக்கம் குறித்து பேசியவர்,” கீழ்வயிறு, கால்பகுதி, கை ஆகியவற்றில் நடத்தப்படும் அறுவை சிகிச்சைக்கு முதுகு தண்டுவடத்திலோ அல்லது கைக்கு செல்லும் நரம்பு பாதையிலோ மயக்க மருந்து செலுத்துவதை பகுதி மயக்கம் என்பார்கள்” என்று தெரிவித்தார்..

மேலும், “ முழு மயக்கத்தில் நமக்கு வாந்தி, தலைச்சுத்தல், வலி போன்ற பின் விளைவுகளை பகுதி மயக்கத்தில் அதிக அளவு குறைக்கலாம். இதுவே இதன் சிறப்பம்சம். இவற்றை அறிந்து கொண்ட பிறகு நோயாளியும் அவரது உறவனர்களும் கலந்து ஆலோசனை செய்து மயக்க முறையை தேர்வு செய்யலாம். ஏதாவது சந்தேகம் இருப்பின் அனைத்தையும் அறுவை சிகிச்சைக்கு முன்பே மருத்துவரிடம் கேட்டு அறிந்து தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.. அதன் பிறகு மருத்துவர் மேலேயும், மருத்துவமனை மேலேயும் நோயாளி நம்பிக்கை வைத்து சிகிச்சைக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்” என்று மருத்துவர் ராமமூர்த்தி இந்த பதிவின் மூலமாக மயக்கவியல் சம்மந்தமாக போதுமான அளவு நம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிலளித்துள்ளார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion