உடல் நலத்திற்கேற்ற ரோஜா

By Chakra

Rose
காதலை சொல்லும் மலர் ரோஜா. இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல
மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 35 மில்லியன் ஆண்டு காலமாக
பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை
பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர்
தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளில் வாசனை
திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள்.
ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை
அலங்கரித்துள்ளது.

ரோஜாவின் மருத்துவகுணம்

இந்தியா முழுவதும் அழகிற்காகவும், மருத்துவத்திற்காகவும் தோட்டத்தில்
பயிரிடப்படுகிறது. மலர்கள் மருத்தவ பயன் உடையவை. ரோஜாப்பூவின் அழகும், மணமும்
மக்களை அதுவும் பெண்களை பெரிதும் கவரும். பொதுவாக ரோஜாப்பூவால் சரும நோய்கள்
நீங்கும். ரத்த விருத்தி உண்டாகும்.. சீதபேதி குணமாகும். ரோஜா மலரின் இதழ்களை
வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் மலர்கள் நறுமண எண்ணெய் உடையவை. ஃபினைல்எத்தானல், க்ளோ ரோஜினிக் அமிலம்,
டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற வேதிப்பொருட்கள் ரோஜாமலரில்
அடங்கியுள்ளன.

உஷ்ணத்தால் வரும் வயிற்று வலிக்கு:

ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை (தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்)
ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும்.
மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும்.
குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும் பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும்
மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும். குன்ம
வயிற்று வலிக்கு இது சிறந்ததாகும்.

ரத்த விருத்திக்கு குல்கந்து

களிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ்களை பாத்திரத்திலிட்டு கொதிக்கும் நீரை
அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு (இதழ் கால் அல்லது முக்கால் இருக்கலாம்)
அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத்திருக்க
வேண்டும். பிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இதழ்களை கசக்கி
பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும்.

பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற்றும் 200
மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும். சர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே
செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும்.
இப்போது பாகு தேன் பதத்திற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரை
கலந்து கிளறி இறக்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு
கரண்டி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வரலாம். இதனால்
ரத்த விருத்தி உண்டாகும்.

சரும நோய்களுக்கு:

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன்
சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும்
உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள்
ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, April 19, 2011, 10:20 [IST]
Desktop Bottom Promotion