எச்சரிக்கை! நீங்க செய்யும் இந்த தவறுகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தி புற்றுநோயை வரவழைக்குமாம்.. உஷார்...

Kidney Cancer: உலகெங்கிலும் சுமார் மில்லியன் கணக்கான மக்கள் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். புள்ளிவிவரங்களின் படி, உலகளவில் புற்றுநோயின் வகைகளில் சிறுநீரக புற்றுநோயானது 14 ஆவது பொதுவான புற்றுநோயாகும் மற்றும் இந்த வகை புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகின்றன. மேலும் ஆண்டுதோறும் சுமார் 4,03,000 புதிய சிறுநீரக புற்றுநோய் வழக்குகள் பதிவாகி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட சிறுநீரக புற்றுநோயானது சிறுநீரகங்களில் உள்ள செல்களில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, அந்த செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளர்ச்சி அடையும் போது ஏற்படுகிறது. சிறுநீரக புற்றுநோய் ஒருவருக்கு இருந்தால், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் இரத்தம் மற்றும் பிற அறிகுறிகளை சந்திக்க நேரிடும். நிபுணர்களின் கூற்றுப்படி, எந்த வகையான புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளித்து சரிசெய்துவிடலாம். அதோடு புற்றுநோயின் காரணங்களை அறிந்தால், வராமல் தடுக்கலாம்.

Kidney Cancer Top 5 Lifestyle Mistakes That Are Damaging Your Kidneys And Cause Cancer

இருப்பினும் சிறுநீரக புற்றுநோய்க்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் ஒருசில வாழ்க்கை முறை பழக்கங்கள் ஒருவருக்கு சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்போது சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் அந்த பழக்கங்கள் என்னவென்பதைக் காண்போம்.

1. பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகளை உண்பது

நிபுணர்களின் கூற்றுப்படி, ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மிகவும் சுவையாக இருக்கலாம். ஆனால் அதே சமயம் அவற்றில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை மிகவும் அதிக அளவில் உள்ளன. இந்த இரண்டும் ஒருவரது உடலில் அதிகமானால், அது சிறுநீரகங்களின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்துவதோடு, சேதமடையச் செய்து, சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே இப்படிப்பட்ட உணவுகளை அதிகம் உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

2. வலி நிவாரணிகளை அதிகம் எடுப்பது

நிறைய பேர் தலைவலி, கால்வலி, வயிற்று வலி போன்றவற்றிற்கு மருத்துவரின் அறிவுரையில்லாமல் தாங்களாகவே மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, இப்படிப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளை ஒருவர் அதிகமாக எடுத்தால், அது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதோடு, சிறுநீரகங்களில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தி, சிறுநீரக புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

3. அதிக உப்பை உணவில் சேர்த்து உண்பது

மருத்துவர்களின் கூற்றுப்படி, உப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டால், அது உடலில் சோடியத்தின் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சிறுநீரகங்களின் செயல்பாட்டை குறைத்து விடும் மற்றும் உடலில் இருந்து சிறுநீர் வெளியேற்றப்படாமல் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

இப்படி சிறுநீரகங்களில் அழுத்தம் அதிகரித்தால், நாளடைவில் அது சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடும். எனவே உணவில் உப்பை அதிகம் சேர்க்காதீர்கள் மற்றும் உப்புள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளாதீர்கள்.

4. போதுமான நீரை அருந்தாமை

உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், குறிப்பாக சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு போதுமான அளவு நீரை தினமும் தவறாமல் குடிக்க வேண்டும். சிறுநீரகங்கள் நல்ல நீரேற்றத்துடன் இருந்தால், உடலில் இருந்து சோடியம் மற்றும் நச்சுக்கள் சிறுநீரின் வழியே வெளியேற்றப்படும்.

ஆனால் நீரை குடிக்காமல் இருந்தால், சிறுநீரகங்களால் நச்சுக்களை வெளியேற்ற முடியாமல் போவதோடு சிறுநீரகங்களில் நச்சுக்கள் அதிகம் தேங்கி, ஒரு கட்டத்தில் அந்த நச்சுக்கள் அப்படியே கட்டிகளாக மாறி சிறுநீரக கற்களை உருவாக்கி, சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கும்.

5. அதிகப்படியான ஆல்கஹால்

மது அருந்தும் பழக்கமானது சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேப் போல் வயிறு முட்ட மது அருந்துபவர்களுககு நாள்பட்ட சிறுநீரக நோயின் அபாயம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே மது பழக்கம் இருந்தால், முடிந்த வரை அப்பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள்.

சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள்

சிறுநீரக புற்றுநோய் இருந்தால் ஆரம்ப காலத்தில் அது வெளிப்படுத்தும் அறிகுறிகள் கவனிக்கக்கூடியதாக பெரிய அளவில் இருக்காது. ஆனால் சிறுநீரகங்களின் கட்டிகளின் வளர்ச்சியைப் பொறுத்து, அறிகுறிகள் தெரியத் தொடங்கும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

* இரத்தம் கலந்த சிறுநீர்
* பக்கவாட்டு இடுப்பு வலி
* மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனம்
* உடல்நலம் சரியில்லாதது போன்ற உணர்வு
* பசியின்மை
* எடை இழப்பு
* மிதமான காய்ச்சல்
* எலும்பு வலி
* உயர் இரத்த அழுத்தம்
* இரத்த சோகை
* அதிக கால்சியம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களிடம் தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி இதுக்குறித்து தெரிவித்து, பரிசோதனை செய்து பாருங்கள். மேலும் மேலே கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்கள் இருந்தாலும், அவற்றைத் தவிர்த்திடுங்கள். இதனால் சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, June 13, 2024, 13:30 [IST]
Desktop Bottom Promotion