விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!

By Sutha

Arali Flower
அரளி விஷத் தன்மை வாய்ந்த தாவரம். இதன் மலர்களின் அலங்கார மதிப்புக்காக வளர்க்கப்படுகிறது. அரளி, செவ்வரளி என்றழைக்கப்படும் இந்த தாவரம் இந்தியா முழுவதும் தோட்டங்களிலும் கோவில் பூந்தோட்டங்களில் அன்றாட பூஜைகளுக்குப் பயன்படுத்துவதற்கென வளர்க்கப்படுகிறது. மலர்கள், சிவப்பு அல்லது மஞ்சள், வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இத்தாவரம் தற்கொலைக்கான முயற்சியுடனும், கருக்கலைப்புடனும் தொடர்பு படுத்தப்பட்டதாகும். ஆனால் இதில் மருத்துவப் பயனும் அடங்கியுள்ளது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்ட செயல்படும் வேதிப்பொருட்களின் கராபின், நீரியோடெரின், நீரியோமோசைடுகள், நீரியாசைடு, புளூமெரிசின்,கிளைகோசைடு, ஆகியவை முக்கியமானவை.

மருத்துவப்பயன் உடைய பகுதிகள்

தாவரத்தின் எல்லா பகுதிகளிலும் மேல் பூசும் மருந்தாகப் பயன்படுகின்றன. குறிப்பாக இலைகள், வேர் மற்றும் வேர்ப்பட்டை மிக முக்கியமானவை.

தோல்நோய்களுக்கு மருந்து

இலைகளின் கசாயம் வீக்கம் குறைப்பான் ஆகும். இலைகளின் சாறு பால்வினை நோய் புண்களுக்கு மேல் பூச்சாகப் பயன்படுகிறது. கண்நோய்களுக்கும் இலைகளின் புதிய சாறு மருந்தாகும். வேர்ப்பட்டை மற்றும் இலைகளின் களிம்பு படை மற்றும் தோல் நோய்களில் பயன்படுத்தப்படுகிறது.

வேர் மட்டும் வேர்பட்டை நல்லதொரு கழலை கரைக்கும் பூச்சு ஆகும். உடல்மெலிவிற்கு உதவுகிறது. கருச்சிதைவினை தோற்றுவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் களிம்பு தொழுநோய் நாட்பட்ட புண் மற்றும் ரத்தம் கட்டியுள்ள இடங்களில் மருந்தாக தடவப்படுகிறது. இந்திய மருத்துவத்தில் காரவீரதியதைலம், தோல்நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுகிறது.

புற்றுநோயை குணப்படுத்தும்

'நைகோபோடிஸ் போடிடா" என்ற தாவரவியல் பெயர் கொண்ட அரளியின் இலை, வேர்களில் இருந்து கிடைக்கும் மூலிகைப் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்க உகந்தது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.

நஞ்சாகும் அரளிச் செடி

இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் பயன்படுத்தினால் தலை எரிச்சல் காய்ச்சல், பித்தக் கோளாறுகள் போன்றவை நீங்கும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.

அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் ஏற்படவில்லை எனில் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.

அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, May 29, 2011, 10:51 [IST]
Desktop Bottom Promotion