எலும்பு முறிவை குணமாக்கும் குங்கிலிய பிசின்

By Mayura Akilan

குங்கிலியம் என்பது மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரம். இது தெற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரவகை ஆகும். இது இந்தியாவின் கிழக்குப்பகுதி நேபாளம் ஆகிய இடங்களில் மிதமாக அல்லது மெதுவாக வளரும் மரம். இமயமலைப்பகுதிகளிலும், பஞ்சாப், பீகார், மேற்குவங்காளம் மற்றும் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளும் குங்கிலியம் மரம் அதிகமாக காணப்படுகிறது.

வட மாநிலங்களில், தேக்கு மரத்துக்கு இணையான சால் மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. சால் மரத்தின் மற்றொரு வகை ஜலரி மரம். சால் மரங்கள் அதிக உயரம் வளரக் கூடியவை. ஜலரி மரங்கள் மூன்று மீட்டர் வளரும் தன்மை கொண்டவை.ஜலரி மரங்கள், வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சிவராத்திரியில் மட்டும் அபூர்வமாக பூ பூக்கிறது. சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.மலை கிராம மக்கள், ஜலரி மர பூக்களை சிவனுக்கு மாலையாக படைக்கின்றனர். தெய்வத் தன்மை கொண்டதாக கருதப்படுவதால், வீட்டு உபயோகத்துக்கும், விறகாகவும் பயன்படுத்துவதில்லை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

ஃபியூரனோன்,ஹோப்பிபால் பீனால், ஃபர்ஃபியுரால்,ஹோமோகடிக்காலின் மோனோ & டை மெத்தில் எஸ்டர், பென்ட்டோளை, லிக்னின்,டான்னின் ஆகிய மருந்துப்பொருட்கள் உள்ளன.

பெரும்பாடு மேகம் போம் பேரா உடலில்
அரும்பிய புண் ஆறும் இவையல்லால் _ துரும்பாம்
எலும்புருக்கி புண் சீழும் ஏகும் உலகில்
சலம் பருகும் குங்கிலியத்தால்."

என்று குங்கிலியத்தின் பயன் பற்றி பழம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயிற்றுப்போக்கு கட்டுப்படும்

இந்த மரத்தின் தண்டுப்பட்டை மருத்துவ குணம் கொண்டது. தண்டில் இருந்து கிடைக்கும் பிசின் துவர்ப்புள்ளது. வயிற்றுப் போக்கையும் சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.

இளநீரில் காய்ச்சி வடித்த குங்கிலிய பஸ்பத்தை சாப்பிட வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, சிறுநீர் நாள ரணம் போன்றவை குணமாகும்.

குங்கிலிய வெண்ணெயை கொட்டைபாக்களவு வீதம் தினம் இருவேளையாக அருந்திவர வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, எரிச்சல், பிரமேகம் முதலியன குணமாகும். எலும்புறுக்கி நோயை கட்டுப்படுத்தும்.

நறுமணம் தரும் குங்கிலியம்

குங்கிலியம் பிசினில் இருந்து மூலிகை மருந்துகள், வாசனை திரவியம், கிருமி நாசினி தயாரிக்கப்படுகின்றன. மரத்தின் பிசின் துவர்ப்பி, சிறுநீர் பெருக்கி, ஊக்கமளிக்கும், கப நிவாரணி. முறிந்த எலும்பை ஒட்ட வைக்கும். விந்துவை வளர்த்தல், கபம், வாதம், நீரிழிவு நோய்களுக்கு நிவாரணம் தருகிறது. கொழுப்பை குறைக்கிறது. ரத்த மூலத்தை குணப்படுத்தும்.

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் குங்கிலியம் ஜலரி மரங்கள் காணப்பட்டாலும், தளி வனப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.ஜலரி மரங்கள் இருக்கும் இடத்தில் மூன்று கி.மீ., சுற்று வட்டாரத்தில் நறுமணம் வீசுகிறது. இந்த மணத்தை நுகர, பாம்புகள் அதிகளவில் படையெடுக்கின்றன.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, August 26, 2011, 14:12 [IST]
Desktop Bottom Promotion