உங்க இதயம் ஆபத்திலிருப்பதை வீட்டிலேயே கண்டறியும் 5 நொடி சோதனை - செஞ்சு பார்த்து உயிரை காப்பதிக்கோங்க

இதய செயலிழப்பு என்பது உலகளவில் கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ள ஒரு ஆரோக்கிய பிரச்சினையாகும், மேலும் இது பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. துரதிர்ஷ்டவசமாக இது பெரும்பாலும் அமைதியாகவே பாதிக்கிறது. பலரும், வயதாவதன் அறிகுறிகள் என்று நினைத்து நீடித்த சோர்வு போன்ற ஆரம்ப அறிகுறிகளையும், மூச்சுத்திணறல் மற்றும் அதிகரித்த இதயத் துடிப்பு போன்ற மிக முக்கியமான அறிகுறிகளையும் புறக்கணிக்கின்றனர்.

Heart Health This 5 Second Leg Test Can Detect Early Heart Failure

சமீப மாதங்களில், '5 வினாடி கால் சோதனை' (5 second leg test) எனப்படும் ஒரு எளிய பரிசோதனை உத்தி, ஆரம்பகால இதயப் பிரச்சனைகளைக் கண்டறியும் அதன் திறனுக்காக இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒரு நோயறியும் கருவி அல்ல என்றாலும், இதயத்தில் ஒரு பிரச்சினை இருப்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறியாக இது செயல்பட முடியும்.இந்தச் சோதனை எப்படி செயல்படுகிறது, மேலும் இதய செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எவ்வளவு நன்மை பயக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதய செயலிழப்பு என்றால் என்ன?

இதய செயலிழப்பு என்றால் இதயம் உடனடியாக செயல்படுவதை நிறுத்திவிட்டது என்று அர்த்தமல்ல. கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுக் குறைபாடுகள் காரணமாக, இதயம் இரத்தத்தை அது செய்ய வேண்டிய அளவுக்குத் திறமையாகச் செலுத்தவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். இது நிகழும்போது, ​​உடலின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கால்கள், கணுக்கால்கள் மற்றும் பாதங்களில் திரவங்கள் தேங்கத் தொடங்கலாம். இந்தத் திரவத் தேக்கம், இதய செயலிழப்பின் ஆரம்ப மற்றும் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.

Heart Health This 5 Second Leg Test Can Detect Early Heart Failure

5 வினாடி கால் சோதனை என்றால் என்ன?

5 வினாடி கால் சோதனை என்பது, கால்களில் நீர் தேக்கத்தின் அறிகுறிகளைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட ஒரு விரைவான வீட்டு சுய பரிசோதனை முறையாகும். இந்த சோதனையை எப்படி செய்யலாம் என்று மேற்கொண்டு பார்க்கலாம்,

- வசதியாக உட்காரவும் அல்லது படுத்துக்கொள்ளவும்.

- ஒரு காலை இதய மட்டத்திற்கு மேலே உயர்த்தவும்.

- சுமார் ஐந்து விநாடிகளுக்கு அப்படியே வைத்திருக்கவும்.

- காலைக் கீழே இறக்கி, என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கவும்.

நீங்கள் காலைக் கீழே இறக்கிய பிறகு, உங்கள் பாதம் அல்லது கணுக்காலில் உள்ள வீக்கம் விரைவாகத் திரும்பினால், அது நீர் தேக்கத்தைக் குறிக்கலாம். சீரான இரத்த ஓட்டம் உள்ளவர்களுக்கு, எந்தவொரு வீக்கமும் பொதுவாக விரைவாகக் குறைந்துவிடும், உடனடியாக மீண்டும் வராது.

இந்த சோதனையின் வேறு சில வடிவங்கள், காலின் முன் பகுதி அல்லது கணுக்காலுக்கு மேலுள்ள தோலில் ஒரு விரலை ஐந்து வினாடிகளுக்கு அழுத்திப் பிடிக்குமாறு பரிந்துரைக்கின்றன. விரலை எடுத்த பிறகும் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தென்பட்டால், அது 'பிட்டிங் எடிமா' என்று அழைக்கப்படுகிறது. இது இதய அல்லது சிறுநீரகப் பிரச்சனைகள் ஏதேனும் உள்ளதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

இந்தச் சோதனை ஏன் முக்கியமானது?

இதயச் செயலிழப்பு ஏற்படும்போது, ​​இதயத்தால் இரத்தத்தை முன்னோக்கி செலுத்த முடிவதில்லை. இதன் விளைவாக, இரத்த நாளங்களில், குறிப்பாக உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள நாளங்களில், இரத்தம் தேங்கக்கூடும். இந்த அதிகரித்த அழுத்தம் காரணமாக, இரத்த நாளங்களிலிருந்து திரவம் வெளியேறிச் சுற்றியுள்ள திசுக்களில் புகுந்து, வீக்கத்தை ஏற்படுத்துகிறது. NHS அறிக்கையின் படி, இதயச் செயலிழப்பின் அறிகுறிகளில் ஒன்று, திரவம் தேங்குவதால் ஏற்படும் கணுக்கால் மற்றும் கால்களின் வீக்கமாகும். இந்த வீக்கம் பெரும்பாலும் காலையில் குறைந்த நிலையில் இருக்கும், ஆனால் நாள் செல்லச் செல்ல அது அதிகரிக்கத் தொடங்கும்.

இந்த சோதனையின் பொது உங்கள் காலை நீங்கள் மேலே உயர்த்தும்போது, ​​ஈர்ப்பு விசையின் உதவியால் அந்தத் திரவம் தற்காலிகமாக மீண்டும் இதயத்தை நோக்கி நகரத் தொடங்குகிறது. நீங்கள் காலை மீண்டும் கீழே இறக்கும்போது, ​​இதயத்தால் தனது பணியைத் திறம்படச் செய்ய இயலவில்லை என்றால், அந்தத் திரவம் மிக விரைவாக மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பக்கூடும். திரவத்தின் இந்த விரைவான இயக்கத்தைத்தான் '5-வினாடி கால் சோதனை' சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், கணுக்கால் வீக்கமானது சிறுநீரக நோய், கல்லீரல் பிரச்சனைகள், சில மருந்துகளின் பக்க விளைவுகள் போன்றவற்றால் கூட ஏற்படலாம் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆனால் இந்த வீக்கம் இதய செயலிழப்பின் மற்ற அறிகுறிகளுடன் வெளிப்படும் போது அதை புறக்கணிக்கக்கூடாது.

புறக்கணிக்க கூடாத இதய செயலிழப்பின் அறிகுறிகள்

இதய செயலிழப்பின் மற்ற எச்சரிக்கை அறிகுறிகளுடன் சேர்த்துப் பார்க்கும்போது, இந்த ​​கால் பரிசோதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதய செயலிழப்பின் முக்கிய அறிகுறிகள் என்னவெனில்.

- மூச்சுத் திணறல், குறிப்பாக மல்லாந்து படுக்கும்போது
- அன்றாட வேலைகளின் போது ஏற்படும் வழக்கத்திற்கு மாறான சோர்வு
- நீர்த்தேக்கத்தால் உடலின் எடை அதிகரிப்பது
- நாள் முடிவில் கணுக்கால், பாதங்கள் அல்லது கால்களில் வீக்கம்
- இரவில் தொடர்ச்சியான இருமல் அல்லது மூச்சிரைப்பு
- குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிரம்பியது போன்ற உணர்வு

இந்த அறிகுறிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, May 7, 2026, 18:30 [IST]
Desktop Bottom Promotion