புளியேப்பம் ரொம்ப வாட்டுதா...?

By Sutha

Burping
பால் ஹன் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. அவர் கின்னஸ் சாதனை படைத்த சாதனையாளர். எதில் தெரியுமா?... சத்தமாக ஏப்பம் விட்டதில். அதாவது 109 டெசிபல் அளவுக்கு அவர் ஏப்பம் விட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளாராம். இது அவருக்கு சாதனையாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு எவ்வளவு டென்ஷனாக இருந்திருக்கும்.

பலருக்கும் இந்த ஏப்பப் பிரச்சினை பெரும் மண்டை இடியாக இருக்கிறது. அடிக்கடி ஏப்பம் விடுவது, சத்தமாக விடுவது, அதிக நாற்றம் ஏற்படுவது என பல வகையான சிக்கல்கள் இதில் உள்ளன.

பத்தில் ஒருவருக்கு இந்த ஏப்பப் பிரச்சினை இருக்கிறதாம். மேலும் பெரும்பாலானோருக்கு ஏப்பம் விடும்போது அதிக துர்நாற்றம் ஏற்படுமாம். இதற்காக அத்தனை பேரும் எத்தனையோ உபாயங்களைக் கடைப்பிடித்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனாலும் பயன் இல்லை.

இருப்பினும் சில இயற்கையான வழிமுறைகளை கையாண்டு இதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். அதுகுறித்த ஒரு பார்வை...

உணவுப் பாதையில் காற்றுக் குமிழ்கள் அதிகம் நிரம்புவதே ஏப்பம் உருவாக காரணம். பேசும்போது, சிரிக்கும்போது, சரியாக உட்காராமல் தாறுமாறான கோணத்தில் உட்காருவது போன்றவற்றால் இந்த காற்றுக் குமிழ்கள் ஏற்படுகிறாம். இந்தக் காற்றுக் குமிழ்கள் வெளியேறும்போதுதான் ஏப்பமாக வெளிப்படுகிறது.

பலருக்கும் செரிமானப் பிரச்சினையால்தான் இந்த ஏப்பம் ஏற்படுகிறது. இதற்கு புளிச்ச ஏப்பம் அல்லது புளியேப்பம் என்று பெயர். ஏப்பத்தைத் தடுக்க சில உபாயங்களைக் கடைப்படிக்கலாம். அதாவது சாப்பிடும்போது மகா நிதானமாக சாப்பிட வேண்டும். படு வேகமாக வாயில் திணித்து தண்ணீரை ஊற்றி எழுந்து விடக் கூடாது. மிக மிக மெதுவாக, நன்கு அரைத்து உள்ளே தள்ள வேண்டும். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே செரிமானம் ஆகும் அளவுக்கு நன்கு நொறுங்கத் திண்பது அவசியம்.

அதேபோல காற்று நிரம்பிய குளிர்பானங்களை குடிப்பது, வெங்காயம், நறுமணப் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டில் ஏலக்காயம் இருக்கும். இதை இதை டீயில் போட்டு சாப்பிடுவது உகந்தது. அதேபோல ஏலக்காய் இலை கலந்த டீத்துளைப் பயன்படுத்துவது இன்னும் உத்தமம். மூலிகை டீ, பாசில் டீ, பேக்கிங் சோடா, செம்பருத்தி டீ ஆகியவை ஏப்பத்தை சரி செய்யுமாம். ஏலக்காய், சாப்பிடுவது ஏப்பத்தைக் கட்டுப்படுத்துவதோடு, வாய் நாற்றதையும் விரட்டும் குணம் கொண்டதாகும்.

அடுத்து பெருங்காயம். இது வாய்வுப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் அருமருந்தாகும். வயிற்றில் வாய்வு சேருவதை இது தடுக்கிறது. இதை எலுமிச்சம் சாறு அல்லது மோருடன் சேர்த்து பருகுவது நல்லது.

எலுமிச்சை, வினிகர் போன்றவையும் ஏப்பத்தை சரி செய்யும் மருந்தாகும். சாப்பிடுவதற்கு முன்பு எலுமிச்சம் சாறுடன், கொஞ்சம் வினிகரை சேர்த்து பருக வேண்டும். இதன் மூலம் புளிச்ச ஏப்பம், வயிற்றில் அமிலம் சேருவது, வயிற்றுப் பொறுமல், வாய்வு போன்றவை கட்டுப்படும்.

இஞ்சி, பூண்டு போன்றவையும் அபாரமான மருந்துதான். பசை போல அரைத்து மோர் அல்லது சூடான தண்ணீரில் இவற்றைக் கலந்து குடித்து வருவது பெரும் நிவாரணம் தருமாம். செரிமானப் பிரச்சினையைத் தீர்ப்பதோடு, வாய்வுப் பிரச்சினைக்கும் இது நல்ல மருந்தாகும்.

இப்படி வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து நிரந்தரமாக இல்லாவிட்டாலும் கூட ஓரளவு நல்ல நிவாரணத்தை அடைய முடியும்.

அடுத்தவர்களை அடுத்த முறை 'டிஸ்டர்ப்' செய்வதற்கு முன்பு இதை 'டிரை' செய்து பாருங்களேன்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, March 4, 2012, 17:02 [IST]
Desktop Bottom Promotion