இளமையைக் கூட்டும் இயற்கையான ஃபேஸ் பேக்!

By Mayura Akilan

Natural Methods to Enhance Your Beauty
பெண்களின் முகத்தில் கொஞ்சம் சுருக்கம் விழுந்தாலும் கவலை சூழ்ந்து கொள்ளும். வயதாகிவிட்டதோ? என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து ரசாயன கலவைகள் அடங்கிய கிரீம்களை வாங்கி உபயோகிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதெல்லாம் தேவையில்லை இயற்கை பொருட்களைக் கொண்டு முகத்தின் இளமையை தக்கவைக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.

முகத்தின் இளமையை தக்கவைக்க புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் உள்ள புரதச்சத்து நிறைந்த பொருட்களை பயன்படுத்தி பேஸ்பேக் போடலாம். ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து, பாதாம் பருப்பு 4 எடுத்து இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அதனை நன்றாக அரைத்து பசை போல எடுத்து வைத்துக்கொள்ளவும். இது பேஸ் மாஸ்க் போடுவதற்கு ஏற்றது. அரைமணிநேரம் காயவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ பளிச்சென்று மாறும். முகத்தின் இளமையை தக்க வைக்கும்.

2 டீஸ்பூன் அரிசி மாவு, 4 டீஸ்பூன் டீ தண்ணீர், 1 டீஸ்பூன் தேன், ஆகியவற்றை கலந்து மாஸ்க் போடவும். அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் மென்மையாகவும் பளிச்சென்றும் தோற்றமளிக்கும்.

எலுமிச்சை சிறந்த முகத்திற்கு பிளீச் ஆக செயல்படுகிறது. 2 டீஸ்பூன் எழுமிச்சை சாறு,1 டீ ஸ்பூன் கிளிசரின், 3 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து உடல் முழுவதும் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால் சருமம் பளபளப்பாக மாறும்.

1 டீஸ்பூன் எழுமிச்சை சாறு, 1/2 டீ ஸ்பூன் நறுமண தயிர் மற்றும் 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசவும். 20 நிமிடம் ஊற வைத்து கழுவ முகம் பளபளப்பாக மாறும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள்,1 முட்டையை கின்னத்தில் உடைத்து ஊற்றி அத்துடன்,1 டீஸ்பூன் தேன், சிறிதளவு கிளிசரின் உடன் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து ஒன்றாக கலக்கி உடலில் வறண்ட இடங்களில் தேய்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ சரும வறட்சி நீங்கும்.

ஒரு கின்னத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும். 1/2 கின்னம் தேங்காய் எண்ணெய்,1 டீ ஸ்பூன் தேன், ஆகியவற்றை ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து மிதமான நீரில் கழுவ முகம் பளபளப்பாக மாறும்.

ஸ்ட்ராபரி பழத்தை மிருதுவாக அரைத்து முகத்தில் பூசி ஊறவைத்து கழுவ முகம் பளபளப்பாக மாறும். 1 டீ ஸ்பூன் பால் பவுடர், சிறிதளவு வெள்ளரிக்காய் 1 டீ ஸ்பூன் நறுமண தயிர், ஆகியவற்றை கலந்து நன்கு அரைக்கவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊற வைத்து மிதமான நீரில் கழுவ வேண்டும். முகம் மென்மையாக மாறும்.

Story first published: Friday, August 10, 2012, 15:51 [IST]
Desktop Bottom Promotion