பளபளப்பான முகத்திற்கு ஏற்ற பருவக்கால 'ப்ரூட் ஸ்கரப்'ஸ்...

By Maha

Skin Care
பருவக்காலத்தில் முகமானது எண்ணெய் பசை இல்லாமல் வறட்சியுடன் காணப்படும். இதனால் முகத்தில் சிலசமயம் வெடிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகளும் இருக்கிறது. மேலும் திடீரென காலநிலையானது மாறுபடுவதாலும், சருமமானது உடனே அதற்கேற்றாற்போல் மாறுவது என்பது சற்று கடினமாக இருக்கும். ஆகவே அப்போது முகத்தை அழகாக பராமரிக்க, முகத்திற்கு அந்த காலத்திற்கு ஏற்ற பராமரிப்பானது தேவைப்படுகிறது. அத்தகைய பராமரிப்பிற்கு பழங்கள் ஒரு நல்ல பலனைத் தருகிறது. அது என்னென்ன பழங்கள் என்பதையும், எவ்வாறு அதனை பயன்படுத்த வேண்டும் என்பதனையும் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

பளபளப்பான முகத்தைப் பெற...

ஸ்ட்ராபெர்ரி : கண்ணை பறிக்கும் நிறத்தையும், அழகான வடிவத்தையும், சதை மிகுந்த பகுதியையும் உடைய ஸ்ட்ராபெர்ரி, முகத்திற்கு ஸ்கரப் செய்வதற்கு மிகவும் ஏற்ற பழம். இத்தகைய பழத்தை வாங்கி சாப்பிடும் போது, அதிகம் கனிந்த பழங்களை தூக்கிப் போடாமல், அவற்றை முகத்திற்கு அழகுப் பொருளாகப் பயன்படுத்தலாம்.

அதற்கு அந்த கனிந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு மசித்துக் கொண்டு, அதில் 3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். இது சருமத்தில் சற்று எண்ணெயை தக்க வைக்கிறது. சாதாரணமாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு அரைத்து, அத்துடன் சிறிது சர்க்கரையை சேர்த்து , முகத்தில் தடவி 1-2 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு 2 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவிட வேண்டும்.

வாழைப்பழம் : சரும பராமரிப்பிற்கு ஏற்ற பழம் என்றால் அது வாழைப்பழம் தான். இதன் கனிந்த பழத்தை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்தால், பழத்தின் அனைத்து சத்துக்களும் முகத்திற்கு அப்படியே போகும். மேலும் அதனால் சருமமானது சற்று இறுக்கமடைவதுடன், தேவையற்ற இறந்த செல்களையும் எளிதில் நீக்கிவிடும். அதற்கு வாழைப்பழத்தை நன்கு அரைத்து அதில் சிறிது வெண்ணிலா சாற்றை ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு முகத்திற்கு தடவி, 3 நிமிடம் ஊற வைத்து, பின்பு கழுவவும். இதனால் முகமானது பளிச்சென்று ஆவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.

பப்பாளி : பப்பாளிப் பழத்தில் இருக்கும் பாபெயின் என்னும் நொதிப்பொருள், சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தையும் மென்மையாக்கும். மேலும் அதில் செய்யப்படும் ஃபேசியல் ஸ்கரப் தோலின் துளைகளில் இருக்கும் அழுக்கு, தூசிகளை நீக்குவதோடு, சருமடத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இல்லாமலும் பார்த்துக் கொள்ளும். ஆகவே அதற்கு பப்பாளியை நன்கு அரைத்துக் கொண்டு, சிறிது ஓட்ஸ் மீல், சர்க்கரை சேர்த்து, நன்கு சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகத்திற்கு தடவி, 1 நிமிடம் நன்கு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை பால் அல்லது நீரில் கழுவ வேண்டும்.

பீச் : பீச் பழத்தை நன்கு அரைத்துக் கொண்டு, அதில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதனை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு கழுவ வேண்டும். இதனால் சருமமானது நன்கு இறுக்கமடைவதுடன், ஈரப்பசையுடனும் இருக்கும். மேலும் இதனால் செய்யப்படும் கிரீமைப் பயன்படுத்தினால் முகமானது சிகப்பாகவும் மாறும். அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை பேஸ் செய்து, அதோடு பால் சேர்த்து முகத்திற்கு தடவி, 2 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், முகமானது நல்ல நிறத்தையும் பெறும்.

ஆகவே வீட்டில் சாப்பிட வாங்கும் பழங்களை தூக்கிப் போடாமல், அதனை ஸ்கரப் போல் செய்து சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தினால் முகமானது அழகாக இருப்பதோடு, பளபளப்போடும், சருமத்திற்கு தேவையான ஈரப்பசையுடனும் இருக்கும்.

Story first published: Monday, July 23, 2012, 10:56 [IST]
Desktop Bottom Promotion