வாய் துர்நாற்றம் அதிகமா இருக்கா? அப்ப இந்த பொடியை பேஸ்ட் செஞ்சு காலையிலும், நைட்டும் யூஸ் பண்ணுங்க..

Mouth Odour In Tamil: தற்போது வாய் துர்நாற்றப் பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்பட்டு வருகிறார்கள். வாய் துர்நாற்றப் பிரச்சனையை சந்திக்கும் பலர் தாங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டுகளை மாற்றுவார்கள். ஆனால் என்ன தான் டூத் பேஸ்ட்டுகளை மாற்றி பயன்படுத்தினாலும், வாய் துர்நாற்றம் மட்டும் போயிருக்காது.

ஆனால் இந்த பிரச்சனைக்கு இயற்கை வழிகளை நாடினால் நிச்சயம் ஒரு நல்ல பலனைப் பெறலாம். அதில் வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு தீர்வளிக்க உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் அதிமதுரம். ஆயுர்வேத மருத்துவத்தில் அதிமதுரம் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

How To Use Licorice Root For Mouth Odour In Tamil

இதற்கு இதில் உள்ள மருத்துவ பண்புகள் தான். முக்கியமாக அதிமதுரம் வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகிறது. ஏனெனில் அதிமதுரத்தில் ஆன்டி-மைப்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் போன்றவை அதிகமாக உள்ளன.

இவை அனைத்தும் வாயில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணமான கிருமிகளை அழித்து, ஈறுகளை வலிமையாகவும், சொத்தைகளின்றி ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. இப்படிப்பட்ட அதிமதுரம் பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

அதோடு ஈறு நோய்களின் தீவிரத்தைக் குறைக்கும், பல் சொத்தையை உண்டாக்கும் கிருமிகளை அழித்து பற்களை சொத்தையாவதைக் குறைக்கும் மற்றும் வாய் நன்கு புத்துணர்ச்சியுடன் துர்நாற்றமின்றி வைத்துக் கொள்ளும். இவ்வளவு நன்மைகளை வழங்கும் அதிமதுரத்தை 3 வழிகளில் பயன்படுத்தலாம். இப்போது வாயின் ஆரோக்கியத்திற்கு அதிமதுரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.

1. அதிமதுர வேர் டீ

வாய் துர்நாற்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், அதிமதுர டீயைத் தயாரித்து குடிப்பது நல்லது. இந்த அதிமதுர டீயானது வாயில் உள்ள திசுக்களை ஆற்றவும், வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கின்றன. இந்த டீ தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் 1-2 டீஸ்பூன் அதிமதுர வேரின் பொடியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குடிக்க வேண்டும். இப்படி அடிக்கடி குடித்து வந்தால், வாய் துர்நாற்றம் மட்டுமின்றி, ஈறுகளில் உள்ள பிரச்சனைகளும் நீங்கும்.

2. அதிமதுர வேர் பொடி

கடுமையான வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்திப்பவர்கள், கண்ட டூத் பேஸ்ட்டுகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து, அதிமதுர வேரின் பொடியை நீர் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது நறுமணத்திற்கு புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, அதைக் கொண்டு காலை மற்றும் இரவு தூங்கும் முன் பற்களைத் துலக்க வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், வாய் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.

3. அதிமதுர வேர் மௌத்வாஷ்

அதிமதுர வேர் பொடியை நீரில் கலந்தோ அல்லது அந்த வேர் சேர்த்து கொதிக்க வைத்த நீரைக் கொண்டோ, வாயை கொப்பளிக்க வேண்டும். அதுவும் அந்நீரை 30 நொடிகள் வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்து, பின் துப்ப வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றம் தடுக்கப்படும்.

குறிப்பு

என்ன தான் அதிமதுரம் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டதாக இருந்தாலும், அதை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அதிமதுரமானது குறிப்பிட்ட மருந்துகளுடன் சேரும் போது அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். முக்கியமாக இரத்த அழுத்தத்திற்கு மருந்துகளை எடுப்பவர்கள், அதிமதுரத்தை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

Desktop Bottom Promotion