முடி மடமடன்னு வேகமா வளரணுமா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருட்களை கலந்து யூஸ் பண்ணுங்க..

Hair Care Tips In Tamil: தற்போது தலைமுடி உதிர்வால் ஆண், பெண் என இருபாலரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த தலைமுடி உதிர்வை நிறுத்த நிறைய பேர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பலர் கடைகளில் விற்கப்படும் தலைமுடி உதிர்வை நிறுத்தும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இந்த பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருப்பதால், சிலருக்கு அவை தலைமுடி உதிர்வை இன்னும் அதிகரிக்கலாம். ஆனால் இயற்கை வழிகளின் மூலம் தலைமுடி உதிர்விற்கு தீர்வு கண்டால், முடி உதிர்வதும் தடுத்து நிறுத்தப்படும் மற்றும் தலைமுடியும் நன்கு வளர்ச்சி அடையும்.

Hair Care Tips Top 5 Powerful Ingredients To Mix With Coconut Oil For Hair Growth

அப்படி தலைமுடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்த உதவும் மிகச்சிறந்த பொருள் தான் தேங்காய் எண்ணெய். என்ன தான் இந்த தேங்காய் எண்ணெயை தினமும் தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தாலும், அத்துடன் ஒருசில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் போது, தலைமுடி உதிர்வது நிற்பதோடு, முடியும் நன்கு மடமடவென்று அடர்த்தியாக வளரும். இப்போது தேங்காய் எண்ணெயுடன் எந்த பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் முடி அடர்த்தியாக வளரும் என்பதைக் காண்போம்.

1. வெங்காய சாறு

வெங்காய சாற்றில் சல்பர் அதிகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது மற்றும் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்பு இருப்பதால், இது ஸ்கால்ப்பில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இப்படிப்பட்ட வெங்காயத்தின் சாற்றினை 2 டீஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

2. விளக்கெண்ணெய்

தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மிகச்சிறந்த எண்ணெய் தான் விளக்கெண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடியின் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது.
அப்படிப்பட்ட விளக்கெண்ணெயை ஒரு பௌலில் 2 டீஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் எஎண்ணெய் சேர்த்து கலந்து, லேசாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

3. கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் மருத்துவ பண்புகள் நிறைந்த பொருள். இந்த கற்றாழை குளிர்ச்சியானது மற்றும் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் நொதிகளைக் கொண்டது. இந்த கற்றாழை ஜெல்லை 2 டீஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி, முடி நன்கு வளரும்.

4. வெந்தயம்

வெந்தயத்தில் புரோட்டீன், இரும்புச்சத்து, நிகோடினிக் அமிலம் உள்ளன. இவை தலைமுடியின் வளர்ச்சிக்கு அவசியமான சத்துக்களாகும். இந்த வெந்தய விதைகளை 2 டீஸ்பூன் எடுத்து நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அரைத்த அந்த வெந்தய விழுதுடன், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர நல்ல பலனைப் பெறலாம்.

5. கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன்கள் மற்றும் பீட்டா கரோட்டீன்கள் உள்ளன. இவை தலைமுடி மெலிந்து போவதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இந்த கறிவேப்பிலையை சிறிது எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். சிறந்த தீர்வைப் பெற இதை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

FAQs
தலைமுடியை எப்படி சிறந்த முறையில் அலச வேண்டும்?

தலைமுடியை சிறந்த முறையில் பராமரிக்க, முதலில் தலைமுடி வகைக்கு ஏற்ற ஒரு மென்மையான ஷாம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து, முடி வகைக்கு ஏற்ற கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும்.

எத்தனை நாளைக்கு ஒருமுறை தலைமுடியை அலச வேண்டும்?

தலைமுடியின் வகையைப் பொறுத்து இது வேறுபடும். பொதுவாக, எண்ணெய் பசை அதிகம் கொண்டவர்கள் தங்களின் தலைமுடியை தினமும் அலச வேண்டியிருக்கலாம். ஆனால் வறண்ட முடியைக் கொண்டவர்கள் வாரத்திற்கு ஒரு அல்லது இரண்டு முறை மட்டுமே கழுவ வேண்டும்.

வறண்ட தலைமுடிக்கான சில இயற்கை வைத்தியங்கள் யாவை?

வறண்ட தலைமுடிக்கு சில இயற்கை வைத்தியங்கள் என்றால் முடியின் ஈரப்பதத்தை மீட்டெடுக்க ஆழமான கண்டிஷனிங் சிகிச்சைகளாக தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது தேன் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

BoldSky Lifestyle

Desktop Bottom Promotion