இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Varutharacha Idly Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி செய்வீர்களா? அந்த இட்லிக்கு எப்பவும் சட்னி தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை வறுத்தரைச்ச இட்லி சாம்பாரை செய்யுங்கள். இந்த சாம்பார் செய்தால், சட்னியை இனிமேல் கேட்கமாட்டார்கள். அதோடு இந்த சாம்பாரை ஊற்றி வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சாம்பார் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Tiffin Sambar How To Make Varutharacha Idly Sambar Recipe

உங்களுக்கு இந்த வறுத்தரைச்ச இட்லி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்தரைச்ச இட்லி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டஸபூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* புளி - சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

வதக்குவதற்கு..

* எண்ணெய் - 1 ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, துவரம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் மல்லியை சேர்த்து வறுத்து, அதன் பின் வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய், புளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்புன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் தக்காளி வதக்கியதும், அதில் முக்கால்வாசியை எடுத்து ஒரு தட்டில் வைத்து குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து முதலில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் குளிர வைத்துள்ள வெங்காயம் தக்காளியை சேர்த்து , சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த விழுதை அடுப்பில் வதங்கிக் கொண்டிருக்கும் மீதமுள்ள வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து, சாம்பாருக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாருடன் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கலந்தால், சுவையான வறுத்தரைச்ச டிபன் சாம்பார்/இட்லி சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, June 11, 2026, 22:52 [IST]
Desktop Bottom Promotion