பீட்ரூட் வடை

By Maha

பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளின் பசியைப் போக்க நினைத்தால், அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வண்ணம் பீட்ரூட் வடை செய்து கொடுங்கள். குறிப்பாக இந்த வழி காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு ஏற்ற ஒன்று. மேலும் இந்த வடை மிகவும் சுவையாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த பீட்ரூட் வடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Beetroot Vada

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 4
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
துவரம் பருப்பு - 200 கிராம்
வரமிளகாய் - 6
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பீட்ரூட்டை துருவிக் கொண்டு, அதனை வாணலியில் போட்டு எண்ணெய் சேர்க்காமல், வதக்க வேண்டும்.

பின்பு அத்துடன் வெங்காயத்தையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி, அதோடு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் சேர்த்து சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதை வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பீட்ரூட் வடை ரெடி!!!

Story first published: Monday, March 16, 2015, 15:54 [IST]
Desktop Bottom Promotion