சளி பிடிச்சிருக்கும் போது இந்த ரசத்தை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும்.. சத்தானதும் கூட..

Posted By:

Poondu Paruppu Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சளி பிடித்துள்ளதா? அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் சமைக்க பிடிக்கவில்லையா? இம்மாதிரியான சூழ்நிலையில் சிம்பிளான ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், சமையலறையில் நீண்ட நேரம் இருக்க வேண்டியதில்லை.

பொதுவாக சளி பிடித்திருக்கும் போது ரசம் குடிக்க இதமாக இருக்கும். அதுவும் ரசத்தில் பூண்டு பருப்பு ரசம் என்றால் ருசி இன்னும் அருமையாக இருக்கும். ஒருமுறை இந்த ரசத்தை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து தருமாறு கேட்பார்கள்.

Poondu Paruppu Rasam How to Make Garlic Dal Rasam

உங்களுக்கு பூண்டு பருப்பு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு பருப்பு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுஙகள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்

பிற பொருட்கள்...

* புளி நீர் - 1 கப்
* பெரிய தக்காளி - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* ரசப் பொடி - 1/2 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 4
* பூண்டு - 4

தாளிப்பதற்கு...

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் ஊற வைத்த துவரம் பருப்பை கழுவி சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், நல்லெண்ணெய் மற்றும் நீரை ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜார் அல்லது இடி உரலில் மிளகு, சீரகம், ஓமம், வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் புளிச்சாறு, நறுக்கிய பெரிய தக்காளி, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் மற்றும் ரசப்பொடியை சேர்த்து, கைகளால் நன்கு தக்காளி மென்மையாகும் வரை பிசைந்து விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பேஸ்ட்டை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாறு மற்றும் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி, கொதி வந்ததும் இறக்கினால், சுவையான பூண்டு பருப்பு ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, February 19, 2026, 14:15 [IST]
Desktop Bottom Promotion