பக்கோடா மோர்குழம்பு - 10 நிமிடத்தில் சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Pakoda MorKuzhambu Recipe In Tamil: தினமும் மதிய வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்து முடிவெடுப்பது ஒரு பெரிய வேலையாக இருக்கும். என்ன தான் நிறைய காய்கறிகள் இருந்தாலும், அந்த காய்கறிகள் நாம் சமைக்க நினைக்கும் போது வீட்டில் இருக்காது. அப்போது கடைக்கு சென்று வாங்கி வந்து சமைக்க சோம்பேறித்தனமாக இருக்கும்.

ஆனால் ஒருசில சிம்பிளான ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், சமைக்க சோம்பேறித்தனமாக இருக்கும் வேளையில் டக்கென்று செய்து முடித்துவிடலாம் அல்லவா? அப்படி குழம்புகளில் மிகவும் ஈஸியானது மோர்குழம்பு. இந்த மோர்குழம்பை சற்று வித்தியாசமாக செய்ய நினைத்தால், அத்துடன் பக்கோடாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பக்கோடா மோர் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

Pakoda Morkuzhambu How To Make a Morkulambu In 10 Minutes

உங்களுக்கு பக்கோடா மோர்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பக்கோடா மோர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 2 பல்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 4-5
* தண்ணீர் - சிறிது
* தயிர் - 1/2 லிட்டர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

பக்கோடாவிற்கு...

* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
* பஜ்ஜி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 50 கிராம் (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, அத்துடன் பஜ்ஜி மாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நீரை ஊற்றி பக்கோடா பதத்திற்கு பிரட்டி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், பூண்டு, கடுகு, சின்ன வெங்காயம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு 1/2 லிட்டர் தயிரை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரைத்ததை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள பக்கோடா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் குழம்பு தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கி, பின் கலந்து வைத்துள்ள தயிரை ஊற்றி, 1 நிமிடம் சூடேற்றி அடுப்பை அணைத்துவிட்டு குழம்பை இறக்கி, செய்து வைத்துள்ள பக்கோடாக்களை சேர்த்து கலந்து, கொத்தமல்லியைத் தூவி, சிறிது நேரம் மூடி வைத்து ஊற வைத்து, அதன் பின் பரிமாறினால், சுவையான பக்கோடா மோர்குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 12, 2025, 13:43 [IST]
Desktop Bottom Promotion