10 நாள் ஆனாலும் கெட்டு போகாம பிரஷ்ஷா ருசியா இருக்கும் பச்சை பூண்டு பொடி.. எப்படி செய்றதுன்னு பாருங்க..

Posted By:

Pacha Poondu Podi Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் எப்போதும் இட்லி, தோசை தான் செய்வீர்களா? அதற்கு பெரும்பாலும் சைடு டிஷ்ஷாக சட்னி, சாம்பார் தான் எப்போதும் செய்வீர்களா? அப்படியானால் இன்று கிராமத்து ஸ்டைலில் பச்சை பூண்டு பொடியை செய்யுங்கள்.

இந்த பூண்டு பொடியை அரைத்து, அதில் தாராளமாக எண்ணெய் ஊற்றி ஊற வைத்தால், 10 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாகவும், சுவையாகவும் இருக்கும். குறிப்பாக வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் சட்டென்று இட்லி, தோசைக்கு சைடு டிஷ் செய்ய வேண்டுமானால், இந்த பச்சை பூண்டு பொடியை செய்யலாம்.

Pacha Poondu Podi: How To Make a Raw Garlic Podi Recipe

இதில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் பயப்பட வேண்டாம். நல்லெண்ணெய் உடலுக்கு நல்லது தான். நீங்கள் எவ்வளவு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுகிறீர்களோ, அந்த அளவில் இந்த பொடியின் சுவை அதிகரிக்கும். முக்கியமாக இதை மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு பதிலாக, அம்மியில் அரைத்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

இந்த பச்சை பூண்டு சட்னி உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் பூண்டு அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது. உணவில் பூண்டை அதிகம் சேர்க்கும் போது, அது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை சீராக்குகிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது, இதய நோயைத் தடுக்கிறது, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

உங்களுக்கு கிராமத்து ஸ்டைல் பச்சை பூண்டு பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பூண்டு பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்ட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வரமிளகாய் - 10
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* பூண்டு - 15 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் வரமிளகாயைப் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு காரம் குறைவாக வேண்டுமானால், வரமிளகாயின் உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளியை சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு 15 பல் பூண்டு சேர்த்து, அதையும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள பொடியைப் போட்டு, தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றி ஒரு 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் 10 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும். இப்போது சுவையான பச்சை பூண்டு பொடி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion