மகாராஷ்டிரா ஸ்டைல் சிக்கன் குழம்பு

By Maha

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான சுவையில் சிக்கன் குழம்பானது இருக்கும். அந்த வகையில் இப்போது மகாராஷ்டிரா ஸ்டைல் சிக்கன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம், இந்த ஸ்டைல் சிக்கன் குழம்பை வீட்டில் முயற்சி செய்யுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் அருமையாக இருக்கும்.

ஏனெனில் இந்த ரெசிபியில் கோடா மசாலா என்ற ஒன்று சேர்க்கப்படுகிறது. சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

Spicy Maharashtra Chicken Curry Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோடா மசாலா - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

கோடா மசாலாவிற்கு...

தேங்காய் - 1 (துருவியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 7 பற்கள்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு கோடா மசாலா செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், துருவிய தேங்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்க வேண்டும்.

பிறகு வதக்கிய பொருட்களை குளிர வைத்து, பின் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் கொத்தமல்லி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

சிக்கனானது 30 நிமிடம் ஊறிவிட்டால், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்மு பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் நன்கு தக்காளி மசியும் வரை வதக்க வேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள கோடா மசாலா சேர்த்து, 1 நிமிடம் கிளறி, பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

பின்னர் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 20 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இப்படி வேக வைக்கும் போது, அவ்வப்போது கிளறி விட வேண்டும். இல்லாவிட்டால், சிக்கன் அடிப்பிடித்துவிடும்.

சிக்கன் நன்கு வெந்துவிட்டால், அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான மகாராஷ்டிரா சிக்கன் குழம்பு ரெடி!!!

Story first published: Saturday, December 14, 2013, 12:01 [IST]
Desktop Bottom Promotion