செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்

Posted By:

Manga Vatha Kulambu Recipe in Tamil: தென்னிந்தியாவில் பொதுவாக பெரும்பாலான வீடுகளில் செய்யப்படும் குழம்பு என்றால் அது சாம்பார்தான். ஆனால் சாம்பாரையும் தாண்டி செய்யக்கூடிய குழம்புகள் பல உள்ளன. அதில் ஒன்று தான் வத்தல் குழம்பு. இந்த குழம்பு செய்வது சுலபமாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த குழம்பு கல்யாண வீடுகளில் செய்வது போல சூப்பராக இருக்கும்.

Manga Vatha Kulambu Recipe How to Make at Home in Tamil

இந்த குழம்பை மூன்று நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம். வத்தக் குழம்பு பொதுவாக சுண்டைக்காய் வத்தல் வைத்துதான் செய்யப்படும். ஆனால் இன்று நாம் பார்க்கப்போவது பச்சை மங்கை வத்தக் குழம்பு. கோடைகாலம் தொடங்கி விட்டதால் இப்போது மாங்காய் பரவலாக கிடைக்கும். எனவே இந்த மாங்காய் வதக்கக் குழம்பை அவசியம் முயற்சி செய்து பாருங்கள். இந்த பச்சை மாங்காய் வத்தக் குழம்பு செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானது.

உங்களுக்கு செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- மாங்காய் - 1
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- வெல்லம் - 2 டீ ஸ்பூன்
- சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் - ½ டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

- நல்லெண்ணெய் - 1 ½ டேபிள் ஸ்பூன்
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- துவரம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு - 15 பல்
- கருவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

- முதலில் மாங்காயை சுத்தமாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

- அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

- இது வேக ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும். பின் இதை ஸ்பூன் அல்லது கத்தியை வைத்து நன்றாக வெந்து தயாராகி விட்டதா என பரிசோதித்து கொள்ளவும்.

- நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மாங்காயை தனியாக தட்டில் எடுத்து வைக்கவும்.

- புளியின் மேற்பரப்பில் இருக்கும் ஓடு மற்றும் குப்பையை தண்ணீரில் அலசி நீக்கிவிட்டு மாங்காய் வேக வைத்த தண்ணீரில் ஊற விடவும்.

- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தமாக தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.

- எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.

- பின் அதில் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.

- அதனுடன் வெங்காயம், பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- ஊற வைத்த புளியை கரைத்து வடித்து எடுத்து, அதை வெங்காயத்துடன் சேர்த்து கிளறவும்.

- அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

- இதில் தேவையான அளவு உப்பு மற்றும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

- கடைசியாக இதனுடன் வெல்லம் மற்றும் வேக வைத்த மாங்காய் சேர்த்து குழம்பு கெட்டியாக வரும் வரை கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான பச்சை மாங்காய் வத்தல் குழம்பு ரெடி!

- இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, April 22, 2026, 19:06 [IST]
Desktop Bottom Promotion