கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் நெய் அப்பம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Krishna Jayanthi Special Nei Appam Recipe In Tamil: கிருஷ்ணர் இவ்வுலகில் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த கிருஷ்ண ஜெயந்தி இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. இந்நாளில் மக்கள் கிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து வழிபாடுகளை செய்வார்கள். கிருஷ்ண பகவானுக்கு பாலால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். எனவே மக்கள் பால் பொருட்களைக் கொண்டு பலவிதமான பலகாரங்களை செய்வார்கள்.

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி நாளில் ஒரு சுவையான பலகாரத்தை செய்து கிருஷ்ணருக்கு படைக்க நினைத்தால், நெய் அப்பத்தை செய்து படையுங்கள். இந்த நெய் அப்பமானது வாழைப்பழம், அரிசி மாவு, நெய் ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியது. மிகவும் சுவையானது மற்றும் செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். முக்கியமாக இது பண்டிகை காலத்தில் சட்டென்று செய்ய ஏற்ற ஒரு அற்புதமான ரெசிபியும் கூட.

Krishna Jayanthi Special Recipe How To Make a Nei Appam Recipe

உங்களுக்கு நெய் அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பொடித்த வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - 1/4 கப் + 1/4 கப்
* வாழைப்பழம் - 2 (நறுக்கியது)
* ஏலக்காய் - 2
* உப்பு - 1 சிட்டிகை
* அரிசி மாவு - 1 கப்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை (விருப்பமிருந்தால்)
* நெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு, அதில் 1/4 கப்புக்கும் சற்று குறைவாக நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து, வெல்லத்தை கரைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் கரைத்து குளிர வைத்துள்ள வெல்லத்தை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் ஏலக்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் அரிசி மாவை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி, அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து, குறைந்தது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். மாவின் பதமானது பணியார மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் ஆப்ப சோடா மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். ஆப்ப சோடா சேர்ப்பது உங்கள் விருப்பத்தை பொறுத்தது. அப்பம் நீண்ட நேரம் மென்மையாக இருக்க வேண்டுமானால், ஆப்ப சோடாவை சேர்த்துக் கொள்ளலாம்.
* அடுத்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அவற்றின் குழிகளில் நெய்யை ஊற்றி, நெய் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி, குறைவான தீயில் வைத்து, ஒரு பக்கம் நன்கு பொன்னிறமானதும், திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேக வைக்க வேண்டும். பின் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இதேப் போன்று அனைத்து மாவையும் அப்பமாக ஊற்றி எடுத்தால், சுவையான நெய் அப்பம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, August 12, 2025, 19:42 [IST]
Desktop Bottom Promotion