கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Koorai Kadai Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி தான் டிபனாக இருக்குமா? அந்த இட்லிக்கு ஒவ்வொரு நாளும் சைடு டிஷ்ஷை முடிவு செய்வது சிரமமாக உள்ளதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? அதுவும் அந்த கார சட்னியை எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் செய்வீர்களா? குறிப்பாக நீங்கள் செய்யும் கார சட்னி சிவப்பு நிறத்தில் தான் இருக்குமா? அப்படியானால் ஒருமுறை புதுமையான சுவையில் கூரைக்கடை கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, பஜ்ஜி, போண்டாவிற்கும் அட்டகாசமாக இருக்கும்.

Koorai Kadai Kara Chutney How To Make Koorai Kadai Chilli Chutney Recipe

உங்களுக்கு இந்த கூரைக்கடை கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கூரைக்கடை கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 14
* பூண்டு - 8 பல்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாயை கீறி சேர்த்து, வெள்ளையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை, புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு, வெங்காயத்தை வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கூரைக்கடை கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 14, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion