விநாயகர் சதுர்த்திக்கு சுண்டலை இந்த பக்குவத்துல தாளிச்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...

Posted By:

Ganesh Chaturthi Special Masala Sundal Recipe: விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டைக்கு அடுத்ததாக வீட்டில் செய்யக்கூடிய ஒரு பிரசாதம் தான் சுண்டல். பொதுவாக சுண்டலை செய்யும் போது, கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலையை வேகவைத்து, அதன் பின் சாதாரணமாக வெங்காயம் சேர்த்து தாளித்து செய்வோம்.

ஆனால் இப்படி சுண்டலை செய்வதற்கு பதிலாக, அந்த சுண்டலுக்கு ஒரு தனித்துவமான மசாலாவை அரைத்து சேர்த்து செய்யும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இதுவரை சுண்டல் சாப்பிட மறுப்பவர்களுக்கு, இப்படி சுண்டலை செய்து கொடுத்தால், கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Ganesh Chaturthi Special Recipe How To Make a Masala Sundal

உங்களுக்கு மசாலா சுண்டலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா சுண்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* சுண்டல் - 1/4 கிலோ (10 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 3/4 லிட்டர்
* உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/4 கப்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* உப்பு - சிறிது
* கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை:

* முதலில் குக்கரில் ஊற வைத்த சுண்டலை எடுத்துக் கொண்டு, அதில் 3/4 லிட்டர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு, சுண்டலை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி, அதோடு கறிவேப்பிலையையும் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, வேக வைத்த சுண்டலை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான மசாலா சுண்டல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, August 27, 2025, 16:30 [IST]
Desktop Bottom Promotion