காரசாரமான... கூர்க் சிக்கன் கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...

Posted By:

Coorgi Chicken Gravy Recipe In Tamil: இந்த வார ஞாயிற்றுக்கிழமை அன்று உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலாக ஏதாவது சமைத்துக் கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் சிக்கன் தான் வாங்கப் போகிறீர்களா? அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு ஒரு அருமையான கர்நாடகா ஸ்பெஷல் கூர்க் சிக்கன் கிரேவியை செய்யுங்கள்.

இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஆனால் இந்த கிரேவியின் ஸ்பெஷலே, அதில் சேர்க்கப்படும் கச்சம்புளி தான். இது ஒரு வினிகர். இதைக் கொண்டு இந்த கிரேவியை செய்யும் போது, கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். இந்த கிரேவி நீர் தோசை, இட்லி, பூரி, சப்பாத்தி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Coorgi Chicken How To Make a Coorgi Chicken Gravy

உங்களுக்கு கூர்க் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கூர்க் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

* பச்சை மிளகாய் - 7
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* கொத்தமல்லி - சிறிது

வறுப்பதற்கு...

* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கச்சம்புளி/கூர்க் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்துக் கொண்டு, அதில் பாதி அரைத்த பச்சை மிளகாய் விழுது மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டி, மூடி வைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, நன்கு நிறம் மாற வறுக்க வேண்டும்.
* பொடியானது காபி பொடியின் நிறத்திற்கு வந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும், மீதமுள்ள அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* சிக்கனின் நிறம் மாறியதும், அதில் வறுத்த பொடியில் இருந்து முதலில் 1 டேபிள் ஸ்பூன் பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு மீண்டும் 1 டேபிள் ஸ்பூன் பொடியை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, பின் மிளகுத் தூள் மற்றும் உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, 5 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் மீதமுள்ள வறுத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, பின் கச்சம்புளி என்னும் கூர்க் வினிகரை சேர்த்து கிளறி, மூடி வைத்து, எண்ணெய் பிரிய கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கூர்க் சிக்கன் கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, December 28, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion