Akshaya Tritiya 2023: செல்வம் பெருக.. அட்சய திருதியை நாளில் எதை தானமாக வழங்க வேண்டும் தெரியுமா?

Akshaya Tritiya 2023: இந்து மதத்தில் அட்சய திருதியை தினமானது மிகவும் மங்களகரமான நாளாகும். இந்நாளில் எந்த ஒரு சுப காரியங்களும் செய்ய ஏற்ற புனிதமான நாளாக கருதப்படுகிறது. பொதுவாக அட்சய திருதியை நாளில் தங்கம் அல்லது வெள்ளி வாங்கினால், அந்த ஆண்டு முழுவதும் கையில் தங்கமும், வெள்ளியும் அதிகம் சேரும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக, இந்நாளில் அனைத்து நகைக் கடைகளிலுமே மக்கள் கூட்டம் அலை மோதும்.

ஆனால் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்குவது மட்டும் நல்லதல்ல, ஏழை எளியோருக்கு அல்லது இல்லாதவர்களுக்கு தானம் வழங்குவதும் ஒருவருக்கு புண்ணியத்தோடு, அதிர்ஷ்டத்தையும், செல்வ செழிப்பையும் தரும். இந்த ஆண்டு அட்சய திருதியை தினமானது ஏப்ரல் 22 ஆம் தேதி வருகிறது. தங்கத்தின் விலை அதிகரிப்பதால், தற்போது தங்கம் வாங்க வேண்டுமென்ற ஆசை பலருக்கும் கனவாக மாறிக் கொண்டிருக்கிறது.

Akshaya Tritiya 2023: Donating These Items Can Bring Good Luck And Prosperity In Tamil

இருப்பினும், அதற்காக கவலைப்பட வேண்டாம். இந்த அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க முடியாவிட்டாலும், இந்நாளில் உங்களால் முடிந்த தானத்தை செய்யுங்கள். கீழே அட்சய திருதியை நாளில் எந்த பொருட்களை தானம் வழங்குவது அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் வழங்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் உங்களால் முடிந்ததை தானம் செய்யுங்கள்.

தண்ணீர்

அட்சய திருதியை நாளில் நீரை தானமாக வழங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். அதுவும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இந்நாளில் நீரை வழங்குவது, கடவுள்களின் ஆசீர்வாதத்தைப் பெற உதவும்.

பார்லி

பார்லி மிகவும் பழமையான ஒரு தானியமாக கருதப்படுகிறது. சொல்லப்போனால், இது தங்கத்தைப் போலவே மதிப்பு நிறைந்ததாக நம்பப்படுகிறது. அதனால் தான் பல்வேறு பூஜைகளின் போது, ஓம குண்டலங்களில் பார்லி பயன்படுத்தப்படுகிறது. எனவே இதை அட்சய திருதியை நாளில் ஒருவருக்கு தானமாக வழங்குவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

குங்குமம்

சமூகத்தில் நல்ல பெயரையும், புகழையும் பெற விரும்புபவர்கள் மற்றும் தங்கள் கணவரின் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டுமென நினைப்பவர்கள், அட்சய திருதியை நாளில் குங்குமத்தை தானமாக வழங்கலாம். இதனால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

வெற்றிலை பாக்கு

இந்து மதத்தில் வெற்றிலை பாக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இது பல்வேறு பூஜைகளில் முக்கிய பொருளாக கருதப்படுகிறது. இத்தகைய வெற்றிலை பாக்கை அட்சய திருதியை நாளில் பிராமணர்களுக்கு தானம் செய்வது அதிர்ஷ்டத்தையும், செல்வ செழிப்பையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.

பால் மற்றும் பிற பால் பொருட்கள்

இந்து மதத்தில் மற்றொரு முக்கியமான மற்றும் புனிதமான பொருளாக கருதப்படுவது பால். இந்த பால் மற்றும் பிற பால் பொருட்களை அட்சய திருதியை நாளில் ஏழை எளியோருக்கு தானமாக வழங்கினால், அது நல்ல செல்வ செழிப்புடன், அதிர்ஷ்டத்தையும் தருவதாக கூறப்படுகிறது.

வெல்லம், நெய் மற்றும் உப்பு

வெல்லம், நெய் மற்றும் உப்பு ஆகிய மூன்று பொருட்களுமே மங்களகரமான பொருட்களாகும். இந்த மூன்று பொருட்களையும் அட்சய திருதியை நாளில் ஏழை மக்களுக்கு வழங்குவது நல்லது. இப்படி செய்வதால், அது ஒருவரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க உதவும்.

ஆடைகள்

இந்து மதத்தில் மக்கள் பெரும்பாலும் ஆடைகளை தானமாக வழங்குவார்கள். அட்சய திருதியை நாளிலும் ஆடைகளை ஏழை மக்களுக்கு தானமாக வழங்கினால், அது கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற உதவும் என்று மக்கள் நம்புகிறார்கள். மேலும் இச்செயலால் ஒருவரது ஆசைகளும் விரைவில் நிறைவேறும்.

சந்தனம்

இந்து மதத்தில் சந்தனம் மிகவும் மங்களகரமான மற்றும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. இந்த சந்தனத்தை அட்சய திருதியை நாளில் தானமாக வழங்கினால், அது செல்வ செழிப்பைத் தவிர, ஆரோக்கியமான நல்வாழ்வையும் வழங்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, April 10, 2023, 19:10 [IST]
Desktop Bottom Promotion