நாம தினமும் சாப்பிடுற இந்த ஒரு பொருள் ஆண்டுதோறும் சுமார் 1.89 மில்லியன் மரணத்தை ஏற்படுத்துகிறது தெரியுமா?

'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்னும் பழமொழிக்கு ஏற்ப, உப்பு நமது தினசரி உணவில் முக்கிய பங்கை வகிக்கிறது. சொல்லப்போனால் உப்பு தான் நமது உணவிற்கு ஒரு சுவையையே தருகிறது. உப்பு இல்லாவிட்டால், அந்த உணவை சாப்பிட சகிக்காது.

அப்படிப்பட்ட உப்பு நமது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒரு கனிமச்சத்து. இந்த உப்பு உணவிற்கு சுவையைத் தருவதோடு மட்டுமின்றி, தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. முக்கியமாக இது உடலில் நீர் மற்றும் கனிமச்சத்துக்களை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.

WHO Says Salt Causes 1.89 Million Deaths Annually; Know The Reasons In Tamil

'ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பதற்கு ஏற்ப, உப்பை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது உடலில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். உலக சுகாதார அமைப்பும், நாம் சாப்பிடும் உப்பு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.89 மில்லியன் மக்களின் மரணத்திற்கு காரணமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் அதிகப்படியான உப்பை உணவில் சேர்க்கும் போது, அது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்து, மரணத்திற்கு வழிவகுக்கிறது.

சரி, எவ்வளவு உப்பை ஒரு நாளைக்கு சாப்பிட வேண்டும்? எந்த அளவுக்கு மேல் உப்பை எடுத்துக் கொண்டால் ஆபத்தானது என்று நீங்கள் கேட்கலாம். பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 9-12 கிராம் உப்பை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் சுகாதார நிபுணர்கள் ஒரு நாளைக்கு 1,500 முதல் 2,300 மிகி எடுக்க அறிவுறுத்துகின்றனர்.

உப்பை எப்படி உயிரைப் பறிக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளை வரவழைக்கிறது?

உயர் இரத்த அழுத்தம்

உப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டாலோ அல்லது உப்பை உணவில் அதிகமாக சேர்த்து வந்தாலோ, அது இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இப்படி ஒருவர் நீண்ட நாட்களாக தொடர்ந்து உப்புள்ள உணவுகளை உட்கொள்ளும் போது, உயர் இரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் உயிருக்கே உலை வைக்கலாம்.

வயிற்று புற்றுநோய்

பல ஆய்வுகளில் அதிகப்படியான உப்பை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு, வயிற்று புற்றுநோயின் அபாயம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் நிபுணர்களும் அதிகளவிலான உப்பு வயிற்றின் சுவர்களில் புண்கள் அல்லது வீக்கத்தை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.

சிறுநீரக செயலிழப்பு

அதிகளவிலான உப்புள்ள உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அது உடலில் நீரைத் தக்க வைத்துவிடும். இது இப்படியே நீடிக்கும் போது, அது சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதித்து, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது.

தலைவலி

நிபுணர்கள் கூற்றுப்படி, அடிக்கடி அல்து எப்போதாவது தலைவலியை சந்திக்கிறீர்களானால், அதற்கு காரணம் நீங்கள் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆம், அதிகப்படியான உப்புள்ள உணவுகளை உட்கொள்ளும் போது, அது இரத்த அழுத்தத்தை சட்டென்று அதிகரித்து, தலைவலியை வரத்தூண்டும்.

எந்த உணவுகளில் உப்பு அதிகம் உள்ளது?

மருத்துவர்களின் கூற்றுப்படி, நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் உப்பு நாம் சேர்க்காமலேயே அதிகமாக உள்ளது. அதில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெஸ்டாரண்ட் உணவுகள், ஜங்க் உணவுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர, பிரட், சாசேஜ், சிப்ஸ், பிரெஞ்சு ப்ரைஸ், சீஸ் மற்றும் சீஸ் பொருட்கள், கேக் மற்றும் பிஸ்கட், சூப் போன்றவற்றிலும் உப்பு அதிகமாக உள்ளன.

உணவில் உப்பைக் குறைப்பது எப்படி?

நீங்கள் உங்கள் உணவில் உப்பைக் குறைக்க நினைத்தால், முதலில் செய்ய வேண்டியது ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஹோட்டல் உணவுகளில் உப்பு அதிகமாக இருக்கும். எனவே வீட்டில் சமைத்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, உணவில் மூலிகைகளைப் பயன்படுத்தவும். முடிந்த வரை நற்பதமான மீன், இறைச்சிகளை வாங்கி சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகளை உட்கொள்வதை அறவே தவிர்த்திடுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion