இந்த பிரச்சனைகளை அதிகமா சந்திக்குறீங்களா? அப்ப உங்க இரத்தத்துல சர்க்கரை அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..

High Blood Sugar Symptoms In Tamil: சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்டநோய். இந்நோயால் இந்தியாவில் சுமார் 77 மில்லியனுக்கும்- அதிமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சர்க்கரை நோய் உடலால் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படாத போது அல்லது இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாத போது ஏற்படுகிறது.

இப்படி இன்சுலினில் பிரச்சனையை சந்திக்கும் போது, அது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, பல தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. உயர் இரத்த சர்க்கரை பிரச்சனையை ஹைப்பர் கிளைசீமியா என்று அழைப்பர்.

High Blood Sugar Symptoms Signs Your Blood Sugar Levels Is Too High

இந்நிலையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும், இன்சுலின் குறைவாகவும் இருக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, அது சிறுநீரகங்களில் சேதத்தை ஏற்படுத்துவது முதல் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது பல மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால் இன்னும் நிறைய பேர் முற்றிய நிலையில் தான் தங்களுக்கு இருக்கும் சர்க்கரை நோயை கண்டுபிடிக்கின்றனர். ஒருவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிக்காட்டும். இப்போது இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், சிறுநீரகங்களின் செயல்பாடு அதிகரித்து, இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை வடிகட்டுவதற்கும், உறிஞ்சுவதற்கும் சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக அதிகமாக சிறுநீரை கழிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டியிருக்கும்.

தாகம்

அடிக்கடி சிறுநீரைக் கழித்தால், அதன் விளைவாக உடலில் நீரிழப்பு ஏற்படும். இதனால் அதிகமாக தாகம் எடுக்கும். எனவே வழக்கத்திற்கு மாறாக இப்படி ஒருவருக்கு அதிகமாக தாகம் எடுத்தால், உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

மிகுந்த உடல் சோர்வு

நீங்கள் அளவுக்கு அதிகமாக உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் உடலானது ஆற்றலுக்காக குளுக்கோஸை திறம்பட பயன்படுத்த முடியாத போது, மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடுகிறது. மேலும் இது நல்ல தூக்கத்தை பெற முடியாமலும் தடுக்கும். இப்படி தூக்கத்தை பெற முடியாத போது, உடல் மிகவும் அசதியாக இருக்கும்.

மங்கலான பார்வை

உங்கள் பார்வை வரவர மங்கலாகிக் கொண்டிருக்கிறதா? அப்படியானால் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது என்று அர்த்தம். எப்போது இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளதோ, அப்போது கண்களில் உள்ள இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, வீக்கம் மற்றும் பார்வை மங்கலுக்கு வழிவகுக்கும். இதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், பின் அது நீரிழிவு ரெட்டினோபதி போன்ற தீவிரமான கண் பிரச்சனைகளை உண்டாக்கும்.

காயங்கள் மெதுவாக குணமாவது

உங்களுக்கு காயங்கள் ஏற்பட்டு, அந்த காயங்கள் விரைவில் குணமாகாமல் இழுத்துக் கொண்டிருக்கிறதா? அப்படியானால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் போது, அது இரத்த ஓட்டத்தை பாதித்து, காயம் குணமாவதைத் தாமதமாக்கும்.

அதிக பசி

எவ்வளவு சாப்பிட்டாலும், பசி எடுத்தவாறு உள்ளதா? எப்போது இரத்த சர்க்கரை அதிகமாக உள்ளதோ, அப்போது இரத்த சர்க்கரையை ஈடுசெய்ய உடல் முயற்சித்து, செல்களுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல், மிகுந்த பசியைத் தூண்டும். எனவே அதிக பசியை சந்தித்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

கை, கால்களில் கூச்சம்

நீண்ட நாட்களாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், அது நரம்புகளை சேதப்படுத்தி, கால்கள் மற்றும் கைகளில் கூச்ச உணர்வு, எரிச்சல் போன்றவற்றை உண்டாக்கும். ஆகவே இப்படியான பிரச்சனையை அதிகம் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, January 23, 2025, 11:49 [IST]
Desktop Bottom Promotion