தமிழ்நாட்டை சேர்ந்த இந்த ராஜா இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளையும் ஆட்சி செய்தார்... அந்த அரசர் யார் தெரியுமா?

இந்திய வரலாறு என்பது பல சக்திவாய்ந்த ஆட்சியாளர்களின் கதைகளால் நிறைந்தது. வரலாற்றில் பல இந்திய ஆட்சியாளர்கள் இந்திய நிலப்பரப்பிற்குள் பரந்த ராஜ்ஜியங்களை கட்டியெழுப்பியிருந்தாலும், அவர்களில் ஒரு சிலரால் மட்டுமே தங்கள் ராஜ்ஜியத்தை இந்திய எல்லைகளுக்கு அப்பால் விரிவுபடுத்த முடிந்தது. அவர்களில் தென்னிந்தியாவின் சோழ வம்சத்தை சேர்ந்த முதலாம் ராஜேந்திர சோழன் மிகவும் குறிப்பிடத்தக்கவராவார்.

முதலாம் ராஜேந்திர சோழன் இந்திய வரலாற்றின் மிகவும் அசாதாரண ஆட்சியாளர்களில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். சோழப் பேரரசை உலகளவில் மிகப்பெரிய சக்தியாக மாற்றிய மன்னராக வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவர் தென்னிந்தியாவை ஆண்டது மட்டுமல்லாமல், கடல்களைக் கடந்து பல வெற்றிகரமான போர்களை வழிநடத்தி, தொலைதூர நிலங்களை தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வந்தார். இந்த பதிவில் முதலாம் இராஜேந்திர சோழன் எப்படி இந்தியாவின் அண்டை நாடுகளை எப்படி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார் என்று தெரிந்து கொள்ளலாம்.

Indian King Who Ruled Foreign Countries

முதலாம் ராஜேந்திர சோழன் யார்?

முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் இராஜராஜ சோழனின் மறைவுக்குப் பிறகு கி.பி 1014 இல் அரியணை ஏறினார். அடுத்த மூன்று தசாப்தங்களுக்குள், அவர் சோழ வம்சத்தை அதன் உச்சத்திற்குக் கொண்டுசென்றார். தனது இணையற்ற இராணுவத் திறமைக்கு பெயர் பெற்ற இராஜேந்திர சோழன், வலுவான தலைமைத்துவத்தையும், தொலைநோக்குப் பார்வையையும் கொண்டிருந்தார்.

அவரது காலகட்டத்தின் மற்ற இராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்களைப் போலல்லாமல், இராணுவத்தில் கடற்படை சக்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய எல்லைகளுக்கு அப்பால் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தனது கடற்படையைப் பயன்படுத்தினார்.

எந்தெந்த நாடுகளை ஆட்சி செய்தார்?

தென்கிழக்கு ஆசியாவில் ஸ்ரீவிஜயப் பேரரசுக்கு எதிரான படையெடுப்பே முதலாம் இராஜேந்திர சோழனின் மிகவும் பிரபலமான வெளிநாட்டுப் படையெடுப்பாகக் கருதப்படுகிறது. இராஜேந்திர சோழனின் படை வங்காள விரிகுடாவைக் கடந்து, நவீன இந்தோனேசியா, சுமத்ரா மற்றும் மலாய் தீபகற்பத்தில் உள்ள பகுதிகளைத் தாக்கியது. அவரது செல்வாக்கு மியான்மர், கம்போடியா மற்றும் வியட்நாமையும் அடைந்தது, இது சோழ கடற்படையின் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே சென்றது.

மேலும் இராஜேந்திர சோழன் தனது அதிகாரத்தை லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு வரை விரிவுபடுத்தினார், அவை இந்தியப் பெருங்கடலில் வர்த்தக வழிகளைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானவையாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம், உலக அளவில் ஒரு பெரிய கடல்சார் படையாக இந்தியாவின் நிலையை அவர் உறுதிப்படுத்தினார்.

கலாச்சார மற்றும் பொருளாதார தாக்கம்

முதலாம் இராஜேந்திர சோழனின் வெளியுறவுக் கொள்கை அவரது இராணுவ வெற்றிகளை விட வலிமையானதாக இருந்தது. அவரது பாதுகாப்பின் கீழ், தமிழ் வணிகர்கள் ஆசிய கண்டம் முழுவதும் தங்கள் வர்த்தக வலையமைப்புகளை விரிவுபடுத்தினர். இந்தியாவின் கலாச்சாரம், மதம் மற்றும் கலை ஆகியவை கடல் கடந்து சென்றன, அங்கு அவை நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின. சோழர் கால கலாச்சார தாக்கங்களை இன்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் கட்டிடக்கலை, கோயில் பழக்கவழக்கங்கள் மற்றும் கடல் உறவுகள் மூலம் காணலாம்.

முதலாம் இராஜேந்திர சோழன் ஏன் தனித்து நிற்கிறார்?

அசோகர் போன்ற மன்னர்கள் பௌத்தம் மூலம் இந்தியாவின் ஆன்மீக செல்வாக்கைப் பரப்பி அமைதியைப் பரப்பினாலும், முதலாம் ராஜேந்திர சோழன் இந்தியாவிற்கு வெளியே உள்ள பிரதேசங்களை நேரடியாக ஆட்சி செய்து நிர்வகிக்க முடிந்ததால் அவர் இந்திய வரலாற்றில் தனித்துவமானவராகக் கருதப்படுகிறார். அவரது வெற்றிகள், வர்த்தகம் மற்றும் ராஜதந்திரத்தின் கலவையானது அவரை பண்டைய ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த ஆட்சியாளர்களில் ஒருவராக ஆக்கியது. இதன்மூலம் இந்திய வரலாற்றில் புகழ் பெற்ற நபராக அவர் விளங்குகிறார்.

Desktop Bottom Promotion