பயம் கண்ணை மறைக்கும்!!!

By Maha

Mango
சிறுவன் ஒருவன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது மரத்தில் கண்ணை பறிக்கும் வகையில் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதனால் அவன் அதனை பறிக்க அந்த மரத்தின் மீது ஏறி கிளையில் நகர்ந்து சென்றான். ஆனால் அந்த கிளையோ அவனது பாரம் தாங்காமல் முறிய இருந்தது.

அதனால் அவன் மற்றொரு கிளைக்கு நகர்ந்தான். பின் அவன் பயந்து கொண்டே கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்" என்று அழைத்துக் கொண்டே இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த ஒரு துறவி, அவனைப் பார்த்து, அவனுக்கு உதவ முன் வந்தார். அதனால் அவர் அவன் மீது சிறிய கல்லை விட்டு எறிந்தார். அவனோ கல்லை எறிந்ததும் அவர் மீது கடும் சினங்கொண்டு, முயற்சி செய்து கீழே இறங்கி வந்தான்.

பின் அந்த துறவியைக் கண்டு கோபத்துடன் சரமாரியாகத் திட்டினான். பிறகு அவரிடம் "நான் உங்களிடம் உதவி தானே கேட்டேன், ஏன் அப்படி செய்தீர்கள்?" என்று கேட்டான்.

அதற்கு அந்த துறவி "நான் உனக்கு உதவி தான் செய்தேன்" என்று சொன்னார். அவனோ திருதிருவென முழித்தான். பின்னர் அந்த துறவி அவனிடம் விளக்கினார். "நான் உன்னை பார்த்த போது உன் பயத்தில் உன் மூளை வேலை செய்யவில்லை. ஆகவே நான் உன் மூளைக்கு வேலை கொடுப்பதற்கு, கல்லை எறிந்தேன். நான் எறிந்ததும், நீ யோசிக்க ஆரம்பித்து, கீழே இறங்கிவிட்டாய். உன் பயத்தை போக்கவே நான் அவ்வாறு செய்தேன்" என்று கூறி சென்று விட்டார்.

Story first published: Saturday, October 13, 2012, 18:16 [IST]
Desktop Bottom Promotion