World Lung Cancer Day 2026: நுரையீரல் புற்றுநோய் உலகம் முழுவதும் அதிகம் காணப்படும் மற்றும் மிகவும் தீவிரமான புற்றுநோய்களில் ஒன்றாகும். ஆனால், ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகள் மிகவும் சாதாரணமாக இருப்பதாலும் அல்லது பொதுவான சுவாச நோய்களின் அறிகுறிகளாக தவறாக நினைக்கப்படுவதாலும், இது பலருக்கு தாமதமாகவே கண்டறியப்படுகிறது.

Advertisement

இந்த நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 01 ஆம் தேதி உலக நுரையீரல் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று உலக புற்றுநோய் தினம். இந்த உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தில், சரியான நேரத்தில் நோயைக் கண்டறிதல் மற்றும் ஆரம்ப சிகிச்சை ஆகியவை சிகிச்சையின் பலனை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என்பதை மக்களுக்கு நினைவூட்டுவது மிகவும் அவசியம்.

Advertisement

க்ளீனீகிள்ஸ் அவேர் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவ ஆலோசகரான டாக்டர் சரத் சந்திர பிருங்கி அவர்கள் நுரையீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள், யாருக்கு அதிக ஆபத்து உள்ளது, சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்து தமிழ்போல்ட் ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

யாருக்கு அதிக ஆபத்து?

1. நேரடியாகவும், மறைமுகமாகவும் (Second-hand Smoking) சிகரெட் புகைக்கு ஆளாகுதல்.

2. காற்று மாசுபாடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் அஸ்பெஸ்டாஸ் (Asbestos), சிலிக்கா (Silica) போன்ற ரசாயனங்களுக்கு ஆளாகுதல்.

3. நச்சு வாயுக்களின் (Toxic Gas) தாக்கத்திற்கு ஆளாகுதல்.

Advertisement

4. குடும்பத்தில் நுரையீரல் புற்றுநோய் இருந்த வரலாறு அல்லது மரபணு (Genetic) காரணங்கள்.

5. நீண்டகால நுரையீரல் நோய்கள் மற்றும் முன்பு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புகள்.

அலட்சியம் செய்யக்கூடாத ஆரம்ப அறிகுறிகள்

1. மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல்.

2. இருமலுடன் ரத்தம் வருதல்.

3. பசி குறைதல் மற்றும் காரணமில்லாமல் உடல் எடை குறைதல்.

4. நெஞ்சு வலி அல்லது மூச்சுத்திணறல்.

5. மீண்டும் மீண்டும் நெஞ்சு தொற்று (Chest Infection) ஏற்படுதல்.

6. குரல் தொடர்ந்து கரகரப்பாக இருப்பது அல்லது காரணமில்லாத சோர்வு.

Advertisement

இந்த அறிகுறிகள் இருப்பதால் மட்டும் நுரையீரல் புற்றுநோய் என்று அர்த்தமில்லை. ஆனால், மருத்துவரை அணுகுவதில் தாமதம் செய்தால், நோய் தாமதமாக கண்டறியப்படும் அபாயம் உள்ளது.

நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சைகள்

"நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் கடந்த சில ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு குறைந்த கதிர்வீச்சு சி.டி. ஸ்கேன் (Low-dose CT Screening) பரிசோதனை மூலம், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே நோயைக் கண்டறிய முடியும்.

மேலும், நுரையீரல் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளில் (Pulmonary Interventions) ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவது மிகவும் எளிதாகவும், குறைந்த அளவு அறுவை சிகிச்சை (Minimally Invasive) முறையிலும் செய்ய முடிகிறது.

Advertisement

நோயின் நிலை மற்றும் வகையைப் பொறுத்து அறுவை சிகிச்சை, கீமோதெரபி (Chemotherapy), கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy), இலக்கு சிகிச்சை (Targeted Therapy), நோய் எதிர்ப்பு சிகிச்சை (Immunotherapy) அல்லது இவற்றின் இணைந்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இன்று, ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற தனிப்பட்ட சிகிச்சை (Personalised Treatment) முறைகள் மூலம் உயிர் பிழைக்கும் வாய்ப்பும், வாழ்க்கைத் தரமும் மேம்பட்டு வருகின்றன" என்று டாக்டர் கூறினார்.

செய்ய வேண்டியவைகள்

"நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க சிறந்த வழி, ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுப்பதும், அதைத் தடுக்க முயற்சிப்பதும் தான். புகைப்பிடிப்பதை நிறுத்துதல், புகையிலைக்கு ஆளாகுவதைத் தவிர்த்தல், சுற்றுச்சூழல் ஆபத்துகளைக் குறைத்தல் மற்றும் நீடித்த சுவாசப் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுதல் ஆகியவை இந்த நோயின் பாதிப்பைக் குறைக்க மிகவும் உதவும்.

Advertisement

ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், நுரையீரல் புற்றுநோய்க்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும். மேலும், சிகிச்சையின் வெற்றியும், உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். எனவே, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், முன்கூட்டியே பரிசோதனை (Screening) செய்துகொள்வது மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவது ஆகியவை இந்த நோயை எதிர்கொள்ள மிகவும் பயனுள்ள வழிமுறைகளாகும்" என்றும் டாக்டர் கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)