For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் உண்டாகும் தசைப்பிடிப்புகளை சரிசெய்ய சில டிப்ஸ்...

By Super
|

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அளவிட முடியாத மகிழ்ச்சியையும், 9 மாதங்களுக்குப் பின் ஒரு புது உயிரை உலகிற்கு தரப்போகும் பேரு வகையையும், அள்ளித்தரக்கூடிய அற்புதமான ஒரு காலகட்டமாகும்.

எனினும், இக்காலகட்டத்தில், குறிப்பாக முதன்முறையாக கருத்தரித்திருப்போர், அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்களோடு, உடல் சில பிரத்யேக அறிகுறிகளை வெளிப்படுத்தி, சில அசௌகரியங்களுக்கு உட்படுவதையும் உணரலாம்.

இவற்றுள் சில அசௌகரியங்கள், கர்ப்ப காலமான 9 மாதங்கள் முழுவதிலும் நீடிக்கக்கூடும், ஆனால் சில அசௌகரியங்கள் ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ அல்லது மூன்று மாத காலமோ இருந்து, பின் மறைந்து விடும். எவ்வாறாயினும், இந்த அசௌகரியங்களை, குழந்தைக்கு பாதிப்பு உண்டாக்கக்கூடிய மருந்து மாத்திரைகளின் உதவியின்றி, ஓரளவுக்கு தாங்கிக் கொள்ளக் கூடியவாறும், எப்படியாவது இயற்கை முறையில் குறைப்பதற்கான தேவையை நன்கு உணர்வோம். அவ்வாறு கர்ப்ப காலத்தில் தோன்றக் கூடிய பொதுவான அசௌகரியங்களுள், வயிறு, அடிவயிறு மற்றும் கால்கள் ஆகியவற்றில் உண்டாகும் தசைப்பிடிப்புகளும் ஒன்றாகும். இந்த தசைப்பிடிப்புகள் வலிமிகுந்தவையாக இல்லாதிருப்பினும், பல நேரங்களில் அசௌகரியமாக உணர்வதற்கு இவையே முக்கிய காரணிகளாகும்.

இந்த தசைப்பிடிப்புகளைக் கட்டுப்படுத்தவும் அவற்றை சிறிது காலத்திற்கேனும் வராமல் தடுப்பதற்கும் சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அந்த அசௌகரியத்திலிருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுடுநீர் குளியல்

சுடுநீர் குளியல்

தசைப்பிடிப்புகளில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக்கூடிய சிகிச்சைகளுள் சுடுதண்ணீர் குளியலும் ஒன்று. வலியிலிருந்தும், சங்கடமான உணர்விலிருந்தும் இம்முறை அளிக்கக்கூடிய நிவாரண பலன்களை எளிதாக உணரலாம். இந்தக் குளியல், தசைப்பிடிப்பினால் விறைத்திருக்கும் கர்ப்பப்பை தசைகளையும், தசைநார்களையும் தளர்த்தி, தசைப்பிடிப்புகளை நிவர்த்தி செய்து, உடல் பாகங்களின் இயக்கத்தை சீராக்கும்.

ஆனால், கர்ப்பிணிகள் மிதமான சூடு இருக்கும் தண்ணீரையே உபயோகிக்க வேண்டும். மேலும், மிக நீண்ட நேரம் குளியலறையில் இருப்பதையும் தவிர்த்து, 10-15 நிமிடங்களுக்குள் குளித்து முடித்து வெளியே வர வேண்டியது அவசியம். இந்த கர்ப்ப கால அசௌகரியத்திலிருந்து, எவ்வித அபாயங்களோ அல்லது பக்கவிளைவுகளின்றி வெளியே வர, இந்த சுடுதண்ணீர் குளியல் மிகவும் பாதுகாப்பான ஒரு வழிமுறையாக விளங்குகிறது.

சூடான ஒத்தடங்கள் உதவும்

சூடான ஒத்தடங்கள் உதவும்

சூடு பரப்பும் அட்டைகள் மற்றும் பைகள் தற்போது சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்து சிறிது நேரம் அழுத்துவதன் மூலம் சரிசெய்யலாம். ஒருவேளை அது போன்ற சூடு பரப்பும் அட்டைகள் இல்லையெனில், ஒரு சுத்தமான துணியை சுடுதண்ணீரில் நனைத்து, அத்துணியில் அதிகமாக இருக்கக்கூடிய நீரைப் பிழிந்து விட்டு, அதனை தசைப்பிடிப்பு உள்ள இடங்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

இது தற்காலிக நிவாரணம் தருவதாக இருப்பினும், உடனடியாக பலன் அளிக்கக்கூடிய ஒரு சிகிச்சை முறையாகும். தண்ணீர் மிகவும் சூடாக இல்லாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். தசைப்பிடிப்புகள் தாங்க முடியாதவாறு இருக்கும் ஒரு நாளின் எந்த நேரத்திலும் இம்முறையை செயல்படுத்தி நிவாரணம் பெறலாம். முக்கியமாக இது கீழ் முதுகு போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய தசைப்பிடிப்புகளுக்கு சிறப்பான நிவாரணம் வழங்கக்கூடியதாக பரிந்துரைக்கப்படுகிறது.

இசையைக் கேட்பது

இசையைக் கேட்பது

அழுத்தம் தரக்கூடிய சூழல்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. ஏனெனில், உடலில் ஏற்படக்கூடிய தசைப்பிடிப்பை அதிகமாக்கக்கூடிய முக்கிய காரணங்களுள் மன அழுத்தமும் ஒன்று. மனதை அமைதியாக வைக்கக்கூடிய, இசையை ரசிப்பது போன்ற எளிய வழிமுறைகள் மூலம் எப்போதும் மனமகிழ்வோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வேலைப்பளுவைக் குறைத்து, மனதை அமைதியாக சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

ஓய்வு மற்றும் தூக்கம் ஆகியவையும் மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கக்குறைவும் பல பிரச்சினைகளுக்கு வித்திடலாம். அதனால், பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் தாய்மார்களுக்கு, குறைந்த பட்சம் 8 முதல் 10 மணி நேரத் தூக்கம் கட்டாயத் தேவை என்று பரிந்துரைக்கப்படுகிறது.

பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகள்

பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகள்

பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகிய தாதுப்பொருட்கள், தசைப்பிடிப்புகளுக்கு எதிரான நற்பயன்கள் கொண்டவைகளாக நம்பப்படுகின்றன. தசைப்பிடிப்புகளை எவ்வித சிரமுமின்றி குணமாக்க, தினமும் உணவில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருள்களைக் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழங்கள், அதிக பொட்டாசியச் சத்து கொண்டவையாகக் கருதப்படுகின்றன. உடலின் கால்சியத் தேவைகளுக்கு, வஞ்சிர மீன் வகைகள், பச்சை இலைகள் நிறைந்த காய்கறிகள், பாதாம் பருப்பு, பால் பொருட்கள் மற்றும் நெத்திலி மீன் வகைகளை உணவில் நிறையச் சேர்த்துக் கொள்ளலாம்.

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி நிறைந்த உணவுகளான சிட்ரஸ் பழங்கள், இலைகள் நிறைந்த கீரை வகைகள், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் இதர உணவுப் பொருள்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை தசைப்பிடிப்பை பாதித்து, உடல்நிலையை மேலும் மோசமாக்கக்கூடியவை.

மசாஜ்

மசாஜ்

தொழில்முறை வல்லுநர் ஒருவரால் தரப்படும் மசாஜ், கர்ப்பப்பைத் தசைகள் மற்றும் தசைநார்கள், கெண்டைக்கால் பின் தசைகள் மற்றும் கால் தசைகளைத் தளர்த்தி, தசைப்பிடிப்புகளை நீக்கக்கூடியதாகும். தினமும் ஒரு வேளை இவ்வாறு மசாஜ் செய்து வந்தால், வலி மற்றும் அசௌகரியத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். அதுவும் நல்ல நறுமண எண்ணையை உபயோகித்து அரோமாத்தெரபி என்றழைக்கப்படும் நறுமருந்து சிகிச்சை மற்றும் மன ஆசுவாசம் ஆகிய இருவகை பலன்களையும் பெறலாம். வழக்கமாக தசைப்பிடிப்புக்கு உள்ளாகக் கூடிய உடல் பாகமான பாதங்களை மசாஜ் செய்ய மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Treat Pregnancy Cramps | கர்ப்ப காலத்தில் உண்டாகும் தசைப்பிடிப்புகளை சரிசெய்ய சில டிப்ஸ்...

There are a few ways in which you can keep a control over pregnancy cramps or at least prevent it for a while.
Desktop Bottom Promotion