For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சிளம் குழந்தைகளுடன் ஏன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?

பச்சிளம் குழந்தைகளுடன் ஏன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?

By Gnana
|

பிறந்தவுடன் குழந்தை, அழ ஆரம்பிக்கும்போது, தாய்ப்பால் தேவை என, தாயிடம் பால்பருக வைப்பார்கள், அதன்பின்னர், பேச்சு வரும்வரை, தேவையை, தனது அழுகையின் மூலமே, அது தாயிடம் கேட்கும், ஆயினும் குழந்தை எதற்கு அழுகிறது என்பதை தாய் அறியாமல், ஏதேதோ செய்ய, குழந்தை மீண்டும் அழ, பதட்டத்தில் மீண்டும் மருத்துவமனைக்கு ஓடுவார்கள்.

Why We Must Speak with New Born Babies?

இதுபோன்ற, பாதிப்புகள், இளம்தாய்மார்களுக்கு அடிக்கடி ஏற்படும், அதுவும், வீடுகளில் அவர்களுக்கு மூத்தவர்கள் துணை இல்லையெனில், வேதனை இன்னும் அதிகமாகும், இதுபோன்ற பாதிப்புகள் எல்லாம் ஏன் ஏற்படுகின்றன? இன்றைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பைப்பற்றித் தெரியவில்லையா?

குழந்தை பெறுவது ஒரு தவம் என்றால், குழந்தையை வளர்ப்பது ஒரு வரம் என்று உணரவில்லையா அவர்கள்? இதற்கெல்லாம், என்ன தீர்வு?

கருவில் கற்றுக்கொள்ளும் குழந்தைகள்!

தாயின் வயிற்றில் இருக்கும்போதே, குழந்தை வெளியுலகின் சத்தங்கள்மூலம், தன் கற்கும் செயலைத்தொடங்கிவிடுகிறது, நமதுதேசத்தில், கருவுற்ற மகளிருக்கு, வளைகாப்பு எனும் வளையல் அணிவிக்கும் சடங்கு, சிறப்பாக கொண்டாடப்படும், அதற்குக்காரணம் என்ன? பலவித மனிதர்களின் வருகை, வாழ்த்துப்பேச்சு, சிரிப்பு போன்ற உற்சாக மனநிலையின் தன்மைகளைக் குழந்தை அறிந்துகொள்ளவே!, குழந்தைகளின் கேட்கும் திரனை மேம்படுத்தவே!

சொல்லப்போனால், கருவில் இருக்கும் குழந்தைக்கு, வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் நம் முன்னோர்களின் சிந்தனைவளமே, இந்தநிகழ்வு. தாய் கையில் அணிந்திருக்கும் கண்ணாடி வளையல்களின் சத்தம் குழந்தைகளுக்கு, ஒலியின் தன்மைகளை அவற்றின் இனிமையை உணர்த்தும். இப்படியெல்லாம், கவனித்து குழந்தை பிறப்பை, வளர்ப்பை, வாழ்வின் சிறந்த கடமையாகக்கொண்டாடிய, காலகட்டம் இன்று இல்லை.

நிகழ்வுகளின் விளக்கத்தை சொல்லும் அளவுக்கு, இன்றைய இளம்தாய்மார்களின் பெற்றோருக்கும் தெரியாமல் போவதுதான், வேதனை. இனிவரும் காலத்தில், வளைகாப்பு, குழந்தைக்கு பெயர்வைத்தல் போன்ற சடங்குகள்கூட, மறைந்துவிடுமோ என்ற வருத்தம் எல்லோருக்கும் இருக்கும். இதனால், இழப்பு, பெற்றோருக்கு இல்லை, மாறாக, இனிவரும் தலைமுறைகளுக்கு வேர்களாக இருக்கப்போகும் இந்த மழலைகளுக்குத்தான், பெரும்பாதிப்பு.

குழந்தைகளின் முதல் பேச்சு, அழுகை!

தாயின் வயிற்றிலிருந்து, அருகில் கேட்கும் பேச்சுக்களின்மூலம், தனக்கு உறவுகள் நட்புக்கள் யார் என்பதை குரலின் மூலம் குழந்தை ஓரளவு உணர்ந்திருந்தாலும், குரலோடு முகத்தையும் நோக்கும்போது, குழந்தையின் புரிதல் என்பது, அதன் மகிழ்ச்சியில், கைகளை ஆட்டி சிரிப்பதில் தெரியும்.

குழந்தைகள் வளரும் முதல் எட்டு மாதங்கள் மிகவும் உன்னதமான காலகட்டமாகும். குழந்தைகள் காணும் யாவற்றுக்கும் விளக்கம் பெறமுயன்று அதை மனதில் இருத்திவைக்கும், இந்த சமயங்களில், தினமும் அடிக்கடி, ஒவ்வொரு நிகழ்வையும், குழந்தையிடம் அக்கறையுடன் சொல்லிவர, குழந்தைகள் அதை மனதில் உள்வாங்கி வைத்துக்கொள்ளும்.

இந்த சமயங்களில், குழந்தைக்கு, உறவுகளை அறிமுகம் செய்து, அவர்களுடன் பேச வைக்கலாம், தாயின் பேச்சுக்கும், தந்தையின் வார்த்தைக்கும், தாத்தா, பாட்டி, மாமா, அத்தை போன்ற உறவுகளின் வித்தியாசங்களை, அவர்கள் உடல் மொழியின் மூலம், பேச்சின் மூலம், குழந்தைகள் அறிந்துகொள்ளும்.

குழந்தைகளின் பேச்சின் வடிவமே, அவற்றின் கைகள் அசைவு!

சில குழந்தைகள், நாம் பேசும்போது, அவற்றின் மறுமொழியாக, அதன் கைகளை அசைத்துக்காட்டும், அதேபோல, உறவு அல்லது நட்பு யாரேனும் வருவது அறிந்து, கைகளை அசைக்கும், அதன் விளக்கம் தெரியாமல், நாம் விழித்தாலும், அது சொல்ல வருவது, மாமா வருகிறார்கள், சித்தி வருகிறார்கள் என்று தாயிடம் உரைக்கவே, இளம்குழந்தைகள், பேச முயற்சிக்கும் சமயத்தில், வார்த்தைகளின்றி, அவற்றின் கை அசைவுகள் மூலம், தாம் பேசஎண்ணியதைக் கூற முயற்சிக்கும் என்கிறார்கள், குழந்தைகள் மனநல மருத்துவர்கள். தாம் கேட்கும் சப்தங்களை உள்வாங்கி, வார்த்தைகளை உருவாக்கும் முயற்சியின் வெளிப்பாடுதான், குழந்தைகளின் கையசைத்தல்.

பேச்சுக்களில் குழந்தைகள் பெறும் சிறந்த அனுபவங்களே, அவற்றின் பிற்கால சிந்தனைகளின் அடிப்படையாக, அமைகின்றன என்கிறார்கள், உளவியல் நிபுணர்கள்.

குழந்தைகளின் எட்டு மாதம் முதல் நாம் பேசவேண்டியவை!

குழந்தைகளுக்கு எட்டு மாதங்களில் இருந்து, பேச்சின் தன்மை புரிந்து, பதிலைப்பேச முயற்சிக்கும் காலகட்டமாகும். இந்த காலங்களில், குழந்தைகள் நடக்க முயற்சித்து, பேச ஆரம்பிக்கும். நாம் குழந்தைகளிடம் ஒவ்வொரு விசயத்தையும், எளிமையாக விளக்கமாக, அவை எதனால் நமக்கு அவசியமாகிறது, அதனால் என்ன நன்மைகள் என்று பொறுமையாக பேசிவர வேண்டும். அன்றாடம் வீடுகளில் உபயோகிக்கும் பொருட்களின் பெயர்கள், அவற்றின் பயன்கள், காய்கறிகள், பழங்கள் என்று ஒவ்வொன்றாக, குழந்தைகள் மனதில் பதியும் வகையில் நாம் வண்ணப்படங்களுடன் விளக்கிக்கூறிவர, குழந்தைகள் அவற்றை, மனதில் பதிய வைத்துக்கொள்ளும்.

இதுபோல, இயற்கை, மரம், செடிகள், காற்று, மழை, நீர் போன்றவற்றை, அவை நமக்கு செய்யும் நன்மைகளைப்பற்றி அடிக்கடி குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும், எப்படி என்றால், நமக்கு விருப்பமான பள்ளி அல்லது கல்லூரி கால நட்புகள், நம் ஊருக்கு வரும்போது, அவர்களிடம் வெகு ஆர்வமாக, நாம் சிறு வயதில் விளையாடிய இடங்கள், திருட்டுமாங்காய் பறித்த தோப்புகள், சைக்கிளில் கீழே விழுந்த கோவில்தெரு, வாய்க்காலில் நீச்சலடித்த நிகழ்வுகள், அடிக்கடி சண்டை போட்டு பிரிந்து, பின்னர் சேர்ந்துகொள்ளும் ஸ்கூல்கால தோழனின் நட்பை, ஸ்கூல் வாசலில் இலந்தைப்பழம் விற்ற பாட்டி போன்ற இளவயது அனுபவங்களை, எவ்வளவு சுவாரஸ்யமாக, நாம் அந்தகாலத்துக்கே திரும்பியது போன்ற பரவச உணர்வுடன் சொல்லி, அந்த இடங்களில் புதுநட்புடன் உற்சாகமாக உலாவருவோம் அல்லவா? அதுபோல, குழந்தைகளுடன் குழந்தையாகி, அவர்களை வளர்க்கவேண்டும்.

பழையநினைவுகளில், புதியநட்பையும் இணைத்து பார்ப்பதே, நம்முடைய அந்த பரவசத்துக்குக்காரணமாக அமைகிறது. அதுபோல, நாம் இத்தனை வயதுவரை வாழ்ந்துவந்த உலகினில், இப்போது இன்னொரு சிறியஉயிரும் சேர்ந்துகொள்ளப் போகிறது என்ற உணர்வின் பெருமிதத்தில், நாம், ஒவ்வொரு விசயமாக, நுணுக்கமாக, எளிமையான முறையில் குழந்தைகளிடம் பகிர, குழந்தைகள் அந்த விசயங்களில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு, மனதில் உள்வாங்கிக்கொள்ளும்.

குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் கதைகளை சொல்லுதல்..

இதுபோல, இரவில் தூங்கும்போது கதைசொல்லுதல், கதைகளின் விளக்கத்தை புரியும்படி சொல்லுதல், கதைகளின் இடையே குழந்தைகளின் கற்பனைத்திறனை வளர்க்கும் வகையில், கேள்விகள் கேட்டல் போன்றவற்றில் நாம் ஈடுபடும்போது, குழந்தைகளின் ஆழ்மனதில் நல்லசிந்தனைகள் ஆழமாகப்படிவதற்கு வாய்ப்பாகும்.
இரவில் கற்பனைகளைத்தூண்டும் கதைகளைக்கேட்டு வளரும் குழந்தைகள், பிற்காலத்தில், பலபிரச்னைகளுக்கு அழுத்தமான தீர்வுகாணும் மனநிலையைப் பெற்றிருப்பார்கள், என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும், குழந்தைகளை தூங்கவைக்கும்போது, தாலாட்டு பாடும்போது, தாயின் குரலில் உள்ள இனிமையும், தாய்மையின் நெருக்கமும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு உணர்ச்சியை அளித்து, அவற்றின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

ஒரு குழந்தை தன்னுடைய ஒரு வயதில், சற்றேறக் குறைய ஐம்பது வார்த்தைகளைத் தெரிந்திருக்கும், அதுவே அடுத்த வருடத்தில் நானூறுக்கும் அதிகமான வார்த்தைகளைத் தெரிந்திருக்கும் என்கிறார்கள் குழந்தை வளர்ப்பியல் ஆலோசகர்கள்.

இந்த சமயங்களில் குழந்தைகளுக்கு மூதோர் வாக்குகள், மகான்களின் போதனைகள் போன்றவற்றை மனதில் இருத்த, சிறந்த காலகட்டமாகும். குழந்தைகள் அவற்றின் பொருள் உணர ஆரம்பிக்கும். இதுபோலவே, அறிவியல், கணிதம் போன்றவற்றின் சிறு கோட்பாடுகளை எளிமையாக எடுத்துக்கூறலாம், சிறந்த இசைமேதைகளின் இசையை கேட்கவைக்கலாம், பாடகர்களின் இன்னிசையை, குரல்வளத்தை அறிமுகப்படுத்தலாம்.

வண்ணங்களின் தன்மைகளை விளக்கலாம், இதுபோன்று நீங்கள் குழந்தைகளை, எந்த நிலைக்கு உயர்த்தவேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த நிலைக்கு ஏற்றவகையில் கருத்துக்களை, சிந்தனைகளை அவர்களின் மனதில் பதியவைக்கலாம்.
மேலைநாடுகளில், நீச்சலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், அங்கே, சில தாய்மார்கள் தங்களின் பிரசவத்தை தண்ணீரில் நடத்தவிரும்புகிறார்கள், காரணம், மகவீனும் சமயத்தில்
ஏற்படும் கடுமையான உடல்வலி பாதிப்புகள் உடல்அசதி குறையும் என்ற நம்பிக்கை. மற்றொன்று, தங்கள் குழந்தை, தண்ணீரில் பிறப்பதால், நீச்சலில் சாதனைபடைப்பார்கள் என்ற எண்ணத்தில். பிறந்த குழந்தையை தண்ணீரில் போட்டு, நீந்தப்பழக வைக்கிறார்கள்.

சிலர், தங்கள் குழந்தைகளை, இளவயதிலேயே, வீட்டுவேலைகளை செய்யப் பழக்குவார்கள். குளித்தபின் ஈரத்துணியை அதற்கான இடத்தில் போடுவது, சாப்பிட்ட தட்டை, பாத்திரம் கழுவும் இடத்தில் வைப்பது, சாப்பிட்டபின் சிங்கில் சென்று கை கழுவுவது, பாட புத்தகங்களை முறையாக பராமரிப்பது, பள்ளி சென்றுவந்தபின் யூனிபார்ம்களை கழற்றி, கைகால் கழுவுவது என்று. பலவேலைகள் செய்ய வைப்பார்கள். இவையாவும், குழந்தைகளுக்கு சுறுசுறுப்பையும், தமது வேலைகளைத் தாமே செய்யவேண்டும் என்ற எண்ணத்தை, இளவயதில் இருந்தே, மனதில் பதிய வைப்பதற்கே.

English summary

Why We Must Speak with New Born Babies?

Why We Must Speak with New Born Babies?
Story first published: Thursday, February 22, 2018, 18:30 [IST]
Desktop Bottom Promotion