அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான வழக்குகளில் ஒன்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் நெருங்கி வருகிறது. அதன் டால்க் அடிப்படையிலான தயாரிப்புகள் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 526758897500) இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுபற்றி வெளியிடப்பட்ட முதல் செய்தியில், வழக்காடுபவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் இந்தச் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், அது நிறுவனத்திற்கு எதிரான நிலுவையில் உள்ள ஏறக்குறைய அனைத்து கருப்பை புற்றுநோய் வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.
ஒப்பந்தம் என்ன சொல்கிறது?
அமெரிக்கா முழுவதும் உள்ள கூட்டாட்சி மற்றும் மாநில நீதிமன்றங்களில் தற்போது நிலுவையில் உள்ள சுமார் 76,000 கருப்பை புற்றுநோய் தொடர்பான வழக்குகள் இந்த முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் வரம்பிற்குள் வருகின்றன. தகுதியுள்ள மனுதாரர்களில் 95 சதவீதத்தினர் இந்தத் தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே, இந்த ஒப்பந்தம் சட்டப்பூர்வமாகச் செயல்பாட்டிற்கு வரும். தேவையான ஒப்புதல் கிடைத்தால், பல விசாரணைகள், மேல்முறையீடுகள் மற்றும் சட்டரீதியான சவால்கள் வழியாக பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்த வழக்குகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் என சொல்கிறது?
சமரசத்திற்கு ஒப்புக்கொண்டாலும், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் எந்தத் தவறும் செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. தனது பவுடர் அடிப்படையிலான தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றும், ஆஸ்பெஸ்டாஸ் இல்லாதவை என்றும், கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தாது என்றும் அந்நிறுவனம் தொடர்ந்து கூறிவருகிறது. இந்த சமரசம் என்பது குற்றச்சாட்டுகளில் விட்டுக்கொடுப்பதல்ல, மாறாக நீண்டகால வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு நடைமுறை முடிவு என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த சர்ச்சையைத் தீர்ப்பது, நீண்டகால நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பதிலாக, நிறுவனம் தனது வணிகத்தில் கவனம் செலுத்த உதவும் என்று அந்நிறுவனத்தின் வழக்குகள் பிரிவின் துணைத் தலைவர் எரிக் ஹாஸ் கூறினார். இந்த ஒப்பந்தத்தின் படி, ஜே&ஜே நிறுவனம் 2027-ஆம் ஆண்டில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலுத்த எதிர்பார்க்கிறது, மீதமுள்ள தொகை 2028-ஆம் ஆண்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொகை 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உயரக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் பவுடர் தொடர்பான புகார்கள்
ஜான்சன்ஸ் பேபி பவுடர் மற்றும் பிற டால்க் அடிப்படையிலான தயாரிப்புகளை நீண்டகாலம் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டி பெண்கள் வழக்குகள் தொடுத்தனர். மேலும், புற்றுநோயை உண்டாக்கும் பொருளாகப் பரவலாக அறியப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் அந்த டால்க்கில் உள்ளது என்றும் பல மனுதாரர்கள் வாதிட்டனர். ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் பல ஆண்டுகளாக தொடர்ந்து மறுத்து வருகிறது. 2020-ல், அந்நிறுவனம் அமெரிக்காவில் டால்க் அடிப்படையிலான ஜான்சன்ஸ் பேபி பவுடரை விற்பதை நிறுத்திவிட்டு, சோள மாவு அடிப்படையிலான ஒரு மாற்றுப் பொருளை அறிமுகப்படுத்தியது.
இந்த ஒப்பந்தம் தற்போதைய வழக்குகளை மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்
திவால் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய முந்தைய சமரச முயற்சிகளைப் போலன்றி, தற்போதைய முன்மொழிவு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இது எதிர்காலத்தில் மக்கள் புதிய வழக்குகளைப் பதிவு செய்வதைத் தடுக்காது. தற்போதைய வழக்குகளுக்கு மட்டுமே இந்தச் சமரசம் வரையறுக்கப்பட்டுள்ளதால், தற்போது வழக்கு தொடர்ந்துள்ளவர்களுக்கு அதிக இழப்பீட்டை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ஒப்பந்தத்திற்குத் தேவையான ஆதரவு கிடைத்தால், சுமார் 18 மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கும் பணிகள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More Articles
- வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா?
- இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா?
- Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?
- கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு
- ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா?
- ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம்