For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செட்டிநாடு பக்கோடா குழம்பு

By Maha
|

இன்று பெரும்பாலான மக்கள் சாப்பிடும் ஓர் ஆரோக்கியமான உணவுப் பொருள் தான் சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா, மசாலா செய்து சுவைத்து போர் அடித்திருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால், சற்று வித்தியாசமாக விடுமுறை நாட்களில் அல்லது இரவில் செட்டிநாடு பக்கோடா குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

இங்கு அந்த செட்டிநாடு பக்கோடா குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
புளி - நெல்லிக்காய் அளவு (1/4 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

பக்கோடாவிற்கு...

கடலைப் பருப்பு - 1/2 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 4 பற்கள்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...

துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு, பூண்டு, சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, அத்துடன் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள பொருட்களான, வெங்காயம், உப்பு, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையை சிறு பக்கோடாக்களாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து குறைவான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும். பின் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களை சேர்த்து கொத்தமல்லியைத் தூவி இறக்கி, 5 நிமிடம் கழித்துப் பரிமாறினால், செட்டிநாடு பக்கோடா குழம்பு ரெடி!!!

Image Courtesy: sharmispassions

English summary

Chettinad Pakoda Kuzhambu Recipe

Do you know how to prepare chettinad pakoda kuzhambu recipe at home easily? Check out and give it a try...
Desktop Bottom Promotion