For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெத்திலி கருவாட்டு தொக்கு

By Maha
|

என்ன தான் கருவாடு பலருக்கு நாற்றமாக இருந்தாலும், அதை சமைத்த பின் அனைவரது வாயில் இருந்தும் எச்சில் ஊறும். அதிலும் அந்த கருவாட்டை தொக்கு செய்து கஞ்சியுடன் சாப்பிட்டால் அதை விட சிறந்த உணவு இவ்வுலகிலேயே இல்லை எனலாம். அந்த அளவில் தேவாமிர்தம் போல் இருக்கும்.

இங்கு பலருக்கும் பிடித்த நெத்திலி கருவாட்டு தொக்கை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

நொத்திலி கருவாடு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கருவாட்டை வெதுவெதுப்பான நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

இறுதியில் கருவாட்டை சேர்த்து 3-4 நிமிடம் பிரட்டி, உப்பு சுவை பார்த்து இறக்கினால், ருசியான நெத்திலி கருவாட்டு தொக்கு ரெடி!!!

Image Courtesy: soupstodesserts

English summary

Nethili Karuvadu Thokku

Do you know how to prepare nethili karuvadu thokku? Check out and give it a try...
Desktop Bottom Promotion