For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

By Maha
|

செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்தும் நன்கு காரசாரமாகவும், மசாலா சேர்த்து நன்கு சுவையாகவும் இருக்கும். அந்த வகையில் அதில் மிகவும் பிரபலமான ஒன்று தான் செட்டிநாடு சிக்கன் பிரியாணி. பலருக்கு இந்த பிரியாணியை எப்படி செய்வதென்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை செட்டிநாடு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது.

இந்த ரெசிபி செய்வதற்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுடன் செய்தால், சுவை அதிகமாக இருக்கும். சரி, இப்போது அந்த செட்டிநாட்டு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Chettinad Chicken Biryani

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 3/4 கிலோ
பாசுமதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1/4 கட்டு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
தேங்காய் பால் - 2 கப்
வறுத்த முந்திரி - 20
தண்ணீர் - 4 கப்
பிரியாணி இலை - 2
எண்ணெய் - 5-6 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு...

பச்சை மிளகாய் - 10
இஞ்சி - 2 இன்ச் துண்டு (நறுக்கியது)
பூண்டு - 8 பற்கள்
பட்டை - 2 இன்ச்
ஏலக்காய் - 3
கிராம்பு - 6
தண்ணீர் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் சிக்கனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்து, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், புதினா மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு 2 கப் தேங்காய் பாலுடன், 4 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு பாசுமதி அரிசியை நீன்கு கழுவி, தேங்காய் பாலில் போட்டு, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு சிக்கனின் நிறம் மாறும் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் தக்காளி, தயிர், மிளகாய் தூள் மற்றும் மீதமுள்ள மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் குக்கரை சிறிது நேரம் மூடி வைத்து, தீயை குறைத்து, 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

அடுத்து குக்கரில் அரிசி ஊற வைத்துள்ள தேங்காய் பாலை வடிகட்டி ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை சேர்த்து, நீரானது ஓரளவு வற்ற ஆரம்பிக்கும் போது, தீயை குறைத்து, குக்கரை மூடி, 10 நிமிடம் கழித்து இறக்கி, கொத்தமல்லி மற்றும் முந்திரியைத் தூவினால், செட்டிநாடு சிக்கன் பிரியாணி ரெடி!!!

Image Courtesy: tastyappetite

English summary

Chettinad Chicken Biryani

Do you know how to prepare Chettinad Chicken Biryani? Check out and give it a try...
Story first published: Sunday, March 1, 2015, 7:55 [IST]
Desktop Bottom Promotion