For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடலில் பிரச்சனைகள் இருப்பதற்கான அறிகுறிகள் என்னெவென்று அறிந்து கொள்ளுங்கள்!

By Hemalatha
|

மனித உடலானது உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை, ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையுடன் இணைந்து ஒரு உறுப்பிற்கு மற்றொரு உறுப்பு உதவி செய்து, உழைத்து, ஓயாமல் மேற்பார்வை பார்த்து, இப்படி பல வேலைகளை, எல்லாமுமாய் சேர்ந்து செய்கின்றன.

அதனால்தான் நாம் சீராக நம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சின்னதாய் ஒரு மாற்றம், ஒரு தவறு நடந்தால் கூட நம் உடல் காட்டிக் கொடுத்துவிடும்.

Signs and symptoms of the body

உடல் கொடுக்கும் சின்ன சின்ன அலாரங்களை, நாம் கண்டு கொள்ளாமல் விட்டால், ஆபத்தில் போய் முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உடலுக்குள் ஏற்படும் மிக கொடிய வியாதிகளுக்கும், நம் உடலானது அறிகுறிகளை மெல்ல காண்பிக்கும். எதையும் ஆரம்பத்திலேயே பார்த்து கவனித்துக் கொள்ள முற்படுவது நல்லது.

அப்படியான சில அறிகுறிகளைக் கொண்டு நம் உடலில் பிரச்சனைகள் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். அவை என்னென்னெ என்று பார்க்கலாம்.

ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் :

கால் மூட்டு மற்றும், கை மூட்டுகளில் கட்டி போல திசுக்கள் தென்பட்டால் அவை ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் வருவதற்கான அறிகுறிகள். அந்த கட்டிகளால் வலி ஏற்படாது. ஆனால் பின்னாளில் ஆர்த்ரைடிஸ்ட் ஏற்பட்டு, அவதிக்குள்ளாக நேரிடும்.

ஆகவே வரும் காப்பது நல்லது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். பாரங்கள் நிறைந்த பளுவைத் தூக்கும்போது இன்னும் எலும்புகள் வலுவிழக்கும். ஆக்வே உரிய மருத்துவரை அணுகி, தகுந்த மாத்திரைகளை சாப்பிட்டால், முடக்கு வாதத்திலிருந்து தப்பிக்கலாம்.

நான் ஸ்டாப் விக்கல் வருகிறதா?

விக்கல் எப்போதாவது வந்தால் ஒன்றுமில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களாக வந்துகொண்டிருந்தால், அது கவனிக்க வேண்டிய பிரச்சனையாகும். விக்கல்தானே என்று சும்மா இருந்துவிடக் கூடாது.

ஏனெனில் மஞ்சள் காமாலையாகவும் இருக்கலாம். வேறு பெரிய பிரச்சனைகள் கல்லீரலுக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது உணவுக் குழாயில் ஏற்படும் நோயாகவும் இருக்கலாம். எனவே உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

காதில் மெழுகு போன்ற திரவம் அதிகமாய் சுரந்தால்:

காதில் சென்றடையும் அழுக்குகளை காதில் சுரக்கும் மெழுகு போன்ற திரவம் உள்ளே சென்று விடாமல் தடுத்து, அவற்றை வெளியேற்றுகிறது.

ஆனால் அந்த மெழுகு அதிகப்படியாக சுரந்தால், காதில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். காது கேட்கும் திறன் குறைவதன் அறிகுறியாக இருக்கலாம். அல்லது நம் உடலுக்கு தேவையான முக்கியமான கொழுப்பு அமிலங்களின் பற்றாக்குறையின் அறிகுறியாலும், காதில் அதிகப்படியான மெழுகு சுரக்கும்.

உடலில் வரிகளாய் தழும்பு ஏற்படுகிறதா?

பொதுவாய் உடல் பருமானாக இருந்து பின் இளைத்தால், தோள்பட்டை, வயிறு, தொடைகளில் வரிவரியாய் தழும்புகள் ஏற்படும். ஆனால் உடம்பில் ஜிங்க் என்ற தாதுப் பொருள் குறைந்தாலும் இந்த மாதிரி தென்படும்.

நம் உடலில் உள்ள தசைகளை இறுகச் செய்து, ஒரு நெகிழ்வுத்தன்மையை சருமத்திற்கு கொடுப்பது, கொலாஜன் தான். ஜிங்க் என்ற தாதுப் பொருள்தான் கொலாஜன் செயலை ஊக்குவிக்கும்.

ஜிங்க் அளவு உடலில் குறைவாகும்போது, கொலாஜன் உற்பத்தியும் குறைவாகும். இதனால்தான் சருமத்தில் வரி வரி தழும்புகள் ஏற்படுகின்றன. ஆகவே உடலில் தேவையான சத்துக்கள் உள்ளதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

ஐஸ் கட்டியின் மேல் விருப்பம் :

ஐஸ் கட்டியைப் பார்த்தவுடன் எடுத்து வாயில் போட்டு சப்ப வேண்டும் என்பது போல் உள்ளதா. அப்படியென்றால் இது ரத்த சோகையின் அறிகுறிதான்.

பைகா என்று அழைக்கப்படும் இந்த நோயில், உடலில் இரும்பு சத்து குறையும் போது, ஐஸ் கட்டி, மண் போன்றவற்றை எடுத்து சாப்பிட வேண்டும் எனத் தோன்றும். ஆகவே சரியான ஊட்டசத்தை சாப்பிட்டு, அதனை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.இல்லையெனில் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து நிறைய பிரச்சனைகளைக் கொண்டு வந்து விடும்.

உடலில் வழக்கத்திற்கு மாறாக மாற்றங்கள், வலிகள் வந்தால் அசட்டையாக இருந்துவிடக் கூடாது. எதுவுமே முளையிலேயே கிள்ளிவிட்டால், ஒன்றுமில்லை. கண்டுகொள்ளாமல் விட்டால்தான் அது மரமாய் உருப் பெற்று நமக்கு பிரச்சனைகளை உண்டாக்கும்.

English summary

Signs and symptoms of the body

Signs and symptoms of the body
Desktop Bottom Promotion