Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கோடையில் குளிர்ச்சியான சருமம் வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக் போடுங்க...

Posted by:
Updated: Thursday, March 21, 2013, 19:24 [IST]

ஒவ்வொரு பருவக்காலத்திலும் சருமத்தை பராமரிப்பது என்பது முக்கியமான ஒன்று. குறிப்பாக கோடைகாலத்தில் தவறாமல் சருமத்தை பராமரித்து பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் சூரியக் கதிர்களின் தாக்கத்தினால், சருமமானது பொலிவிழந்து, கருமை நிற சருமம், சரும வறட்சி, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுதல், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவை ஏற்படும்.

இத்தகைய பிரச்சனை சருமத்தில் ஏற்பட்டால், பின் மீண்டும் அழகாக மாறுவதற்கு நிறைய நாட்கள் ஆகும். எனவே இந்த பிரச்சனைகள் சருமத்தில் வருவதற்கு முன்னரே, சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை கொடுத்து வந்தால், சருமமானது எப்போதுமே அழகாக பொலிவோடு காணப்படும். அதற்காக நாம் செய்ய வேண்டியது ஒன்று தான், அது ஃபேஸ் பேக் போடுவது. ஃபேஸ் பேக் என்றதும் அழகு நிலையங்கள் சென்று தான் போட வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.

அந்த ஃபேஸ் பேக்கை, ஒருசில காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே போடலாம். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான உணவுகள் மற்றும் அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பது என்றெல்லாம் செய்ய வேண்டும். ஏனெனில் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு நீர்வறட்சியும் தான் காரணம். ஆகவே நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதோடு, ஒருசில ஃபேஸ் பேக்குகளை, வீட்டில் இருக்கும் போது போட்டு வந்தால், சருமம் நன்கு குளிர்ச்சியோடும், அழகாக பொலிவோடும் காணப்படும். அந்த ஃபேஸ் பேக்குகள் என்னவென்று பார்ப்போமா!!!

எலுமிச்சை

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை சருமத்தை பொலிவோடு வைத்திருக்க உதவும். அதற்கு எலுமிச்சையின் சாற்றை சருமத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்.

தேன்

சருமத்தை பராமரிக்க உதவும் பொருட்களில் தேனும் ஒன்று. தேனில் சருமத்தை அழகுடன் வைப்பதற்கான பொருள் அதிகம் உள்ளது. மேலும் தேனை சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, கரும்புள்ளிகள் நீங்கி, சருமம் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும்.

பப்பாளி

பப்பாளியை மசித்து, தயிர் மற்றும் தேனுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி வர, சரும சுருக்கங்கள் நீங்கி, சருமம் நன்கு அழகாக இருக்கும்.

தயிர்

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் குளிர்ச்சித் தன்மை அதிகம் உள்ளது. எனவே இந்த தயிரை சருமத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும செல்கள் குளிர்ச்சி அடைந்து, சருமம் நன்கு பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயின் குளிர்ச்சித்தன்மையைப் பற்றி சொல்லவே வேண்டாம். வெள்ளரிக்காய் சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியடைவதோடு, இதனை சருமத்தில் தடவி வந்தால், வெயிலினால் பாதிக்கப்பட்ட சரும செல்களும் குளிர்ச்சியடைந்து, புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் இதனை வட்டமாக நறுக்கி, கண்களில் சிறிது நேரம் வைத்தால், களைப்புடனும், எரிச்சலுடனும் இருக்கும் கண்கள் குளிர்ச்சியுடன் இருக்கும்.

தக்காளி

சருமத்தை நன்கு பொலிவாக்குவதில் பயன்படும் காய்கறிகளில் தக்காளி முக்கியமான ஒன்று. அதிலும் தக்காளியை முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து வந்தால், வெயிலினால் கருமையடைந்த சருமமானது பொலிவோடும், சுருக்கமின்றியும் காணப்படும்.

புதினா

புதினாவிலும் குளிர்ச்சித் தன்மை அதிகம் உள்ளது. அதற்கு புதினாவின் இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலுக்கு நன்மைகளை தருவதோடு, சருமத்தை பொலிவாக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. அதற்கு ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவினால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கி, ஸ்ட்ராபெர்ரியின் நிறத்திற்கேற்ப சருமமும் அழகாக ஜொலிக்கும்.

சந்தனம்

ஃபேஸ் பேக் என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சந்தன ஃபேஸ் பேக் தான். இந்த சந்தன ஃபேஸ் பேக் முகப்பருவை போக்குவதிலும், சருமத்தை குளிர்ச்சியுடன் வைப்பதிலும் மிகவும் சிறந்தது. அதற்கு சந்தன பொடியுடன், ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, காட்டனை வைத்து துடைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தர்பூசணி

கோடைகாலத்தில் தர்பூசணி அதிக அளவில் கிடைக்கும். இந்த நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி உடலையும், சருமத்தையும் குளிர்ச்சியாக்கும். அதற்கு தர்பூசணியின் சாற்றை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சருமம் இறுக்கமடைந்து, கருமை நிறம் நீங்கும்.

ஐஸ் கட்டிகள்

உடனே முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்பட வேண்டுமெனில், ஐஸ் கட்டிகளை வைத்து முகத்தில் சிறிது நேரம் தேய்த்து வந்தால், கோடைகாலத்திற்கு சருமத்தில் இருக்கும் எரிச்சலானது நீங்கிவிடும்.

ஆப்பிள்

ஆப்பிள் சாப்பிட்டால், மட்டும் முகம் பொலிவோடு இருக்காது. பொலிவின்றி காணப்படும் போது சருமத்தில் ஆப்பிளை அரைத்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவினாலும், சருமம் நன்கு அழகாக புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு மட்டுமின்றி, அழகு பராமரிப்பிற்கும் பெரும் உதவியாக உள்ளது. அதிலும் உருளைக்கிழங்கை அரைத்து சருமத்தில் தடவி வந்தால், சருமத்தில் இருக்கும் பழுப்பு நிறமானது நீங்கி, சருமம் பட்டுப் போன்று இருக்கும்.

அவகேடோ

அவகேடோவிலும் சருமத்திற்கான நன்மைகள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் அவகேடோவை வைத்து, சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அந்த மாஸ்க் செய்வதற்கு, அவகேடோவை மசித்து, அத்துடன் சிறிது சர்க்கரை, உப்பு, பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

முட்டை

சருமத்தில் ஏற்படும் கருமை நிறத்தைப் போக்குவதில் மிகவும் சிறந்த பொருள் முட்டை தான். அதிலும் அந்த முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, சருமமே பொலிவோடு புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

வேப்பிலை

வேப்பிலை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, சருமமே அழகாக காணப்படும். அதற்கு வேப்பிலையை இரவில் படுக்கும் போது வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை அரைத்து, அதில சிறிது பேஸ்ட் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் சரும செல்களை குளிர்ச்சியாக்குவதில் மிகவும் சிறந்தது. அதிலும் முகத்தில் வறட்சி, பழுப்பு நிற சருமம், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்குவதிலும் வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க் சிறந்ததாக உள்ளது. அதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் ரோஸ் வாட்டர் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் பாலில் கழுவி, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

குங்குமப்பூ

சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தை தடுக்க குங்குமப்பூ ஃபேஸ் பேக் போடலாம். அதிலும் குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி, ஊற வைத்து கழுவினால், சருமம் நன்கு ரோஸ் நிறத்தில் காணப்படும். குறிப்பாக இந்த ஃபேஸ் பேக்கை ஒரு வாரத்திற்கு 1-2 முறை போட வேண்டும். இதனால் விரைவில் ஒரு நல்ல பலனைப் பெறலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் பொதுவாகவே சருமத்தில் ஏற்படும் முதுமைத் தோற்றம் மற்றும் பழுப்பு நிற சருமத்தை போக்க உதவும். எனவே இத்தகைய பழத்தை வைத்து ஃபேஸ் பேக் போட்டு வந்தால், கோடைகாலத்திலும் சருமத்தை நன்கு பொலிவோடு வைத்துக் கொள்ளலாம். அந்த ஃபேஸ் பேக்கிற்கு ஆரஞ்சு ஜூஸை, முகம் மற்றும் கழுத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Story first published:  Thursday, March 21, 2013, 14:06 [IST]
English summary
During summers, sweat can make you look dull and dark. So, here are few homemade face packs that can provide the cooling effect to your skin and fight sun tan in summers.
Subscribe Newsletter